பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


சொந்தக் கம்பெனியின் முதல் நாடகம் அரங்கேறியது. ஆரம்ப நாடகம் கோவலன்.

நாடகக் கம்பெனி தொடங்குவதற்காய் நாங்கள் செலவிட்ட பணம் சுமார் ஐநூறு ரூபாய். சின்னையாபிள்ளை கம்பெனியிலிருந்து பல நடிகர்கள் எங்கள் கம்பெனிக்கு வரத் தயாராக இருந்தார்கள். என்றாலும், அம்மா யாரையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். கோவலனாக நடித்த எஸ். எஸ். சங்கரன் முன்பே நாடகங்களில் நடித்தவர். மற்ற நடிகர்கள் அனைவரையும் புதிதாகவே சேர்த்துக் கொண்டோம். நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமி நாதன் ஒருவர் மட்டும் சின்னையாபிள்ளையிடமிருந்து விலகிப் பிடிவாதமாக வந்து எங்களிடம் சேர்ந்து கொண்டார். அவருடைய வேண்டுகோளை அம்மாவாலும் தடுக்கமுடியவில்லை.

முதல் நாடகத்தில் தம்பி பகவதி பபூனாக நடித்தான். சுவாமிகளின் அருமையான நகைச்சுவைப் பாடல்களை அவன் பாடியபோது, சபையோர் வெகுவாக ரசித்தார்கள். இரண்டாவதாக மனோஹரா நடைபெற்றது. மொத்தம் ஆறு நாடகங்களே தயாராகியிருந்தன. அவற்றை நடித்துவிட்டு நாகர்கோவிலுக்குச் சென்றோம்.

செய்கு தம்பிப் பாவலர் தீர்க்க தரிசனம்

நாகர்கோவிலிலும் இதே ஆறுநாடகங்கள் நடைபெற்றன. கோவலன் நாடகத்திற்குப் பெரும் புலவரான கோட்டாறு சதாவதானம் செய்குதம்பிப் பாவலர் வந்திருந்தார். ஒழுகினசேரி சரஸ்வதி ஹாலில் நாடகங்கள் நடைபெற்றன. என். எஸ். கிருஷ்ணன் ஒழுகினசேரியைச் சேர்ந்தவராதலால், அங்குள்ள சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து, என். எஸ். கிருஷ்ணனுக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளித்தார்கள். அந்தப் பதக்கத்தைப் பாவலரைக் கொண்டு, வாழ்த்திக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். செய்கு தம்பிப் பாவலர் இன்று நம்மிடையே இல்லை. அவர் பெரும் புலமை வாய்ந்தவர். புத்தேரி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை யவாகள், பாவலர் மறைந்தபோது பாடிய ஒரு உருக்கமான பாடல், அவரது பெரும் புலமைக்குச் சான்றாக நிற்கின்றது.