பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலங்கைப் பயணம்

1928ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன் முறையாக ரயில் மூலமாகப் புறப்பட்டோம். பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. தனுஷ்கோடியை நெருங்கியதும் மண்டபம் கேம்ப்பில் எங்களை இறக்கி விட்டார்கள். ஒரு வார காலம் அங்கேயே தங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது, வைத்தியர் சண்முகம்பிள்ளை ஏற்கனவே ஒரு நாடகக் கம்பெனியைக் கொண்டு போயிருக்கிறாரென்றும், அவர்களே இன்னும் திருப்பிக்கொண்டுவந்து சேர்க்காததால் நாங்கள் போக இயலாதென்றும் சொல்லப்பட்டது. ஒரு கல் மண்டபத்தில் தங்கி, நாற்றம் பிடித்த அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டோம். சண்முகம்பிள்ளை எப்படியோ நிலைமையைச் சமாளித்து, இலங்கைக்கு எங்களைக் கொண்டு போக அனுமதி பெற்றுவிட்டார். ஒருவாரத்திற்குப் பின் தனுஷ்கோடி போய்க் கப்பலேறினோம். கப்பலில் வீசிய மணம் சிலபேருக்குப் பிடிக்கவில்லை. தலைச்சுற்று, மயக்கம் எல்லாம் வந்தன. இரவு எட்டு மணியளவில் தலைமன்னார் போய்ச் சேர்ந்தோம். தலைமன்னரில் கொழும்புக்குப் புறப்பட ரயில் காத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ரயிலில் போய் ஏறினோம். ரயிலில் உட்காரவே இடமில்லை. மிகவும் நெருக்கடி. இடையில் லுங்கியும், மேலே ஜாக்கெட் மட்டும் போட்ட சிங்களப் பெண்கள் சிலர் வந்து, நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்கார்ந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அலுப்பு மிகுதியாக இருந்ததால் நான் விரைவில் உறங்கி விட்டேன். அதிகாலேயில் கொழும்பு மருதானே ரயில் நிலையத் திற்கு வந்து சேர்ந்தோம். சண்முகம்பிள்ளை எங்களை வரவேற்று ஜிந்தும்பிட்டி ஹாலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஜிங்தும்பிட்டி ஹால்

அப்பொழுது கொழும்பில் நாடகம் நடைபெறும் பெரிய தியேட்டர் ஒன்றுதானிருந்தது. அதுதான் ஜிந்தும்பிட்டி ஹால்.