புலியூர்க் கேசிகன் 35 2. முல்லை வளம் முல்லையாகிய ஒழுக்கத்திலே விளங்கும் பொருள்பொதிந்த சிந்தனைச் செல்வங்களின் விளக்கத்தை அறிவதற்கு உதவும் இனிதான செய்யுட்கள். முல்லையாவது இருத்தலும், இருத்தல் நிமித்தமுமாகிய அகவொழுக்க நெறியினை விளக்கும் பகுதியாகும். தலைவன் தலைவியர் இருவரும் ஒப்பற்ற இன்பநலத்திலே திளைத்து வருகின்ற காலத்திலே, தலைவன் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடுசெல்லவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது. தன் பிரிவினை அவள் பொறுத்திருக்க ஆற்றாள் என்பதனை தலைவன், தனக்குரிய கடமையுணர்வுகளினாலே அவளைப் பிரிந்து செல்வதற்கும் துணிகின்றான். கார்ப்பருவத்தே தான் தவறாது திரும்பி வந்து விடுவதாக உறுதிகூறிப்பிரிந்தும் போகின்றான். அவன் பிரிவினாலே அவள் பெரிதும் உளம் வாடி நலிவடைந்தனள் என்றாலும், கார்காலத்தின் வரவு வரைக்கும் ஒருவாறாக எப்படியோ அமைந்திருந்தாள். ஆனால், கார்ப் பருவம் வரவும், அவனை வரக்காணாதபோது அவளுடைய உள்ளம் வேகின்றது. அந்த வேதனையின் அழலினை வெளிப்படுத்துவன இப்பகுதியிலே வருகின்ற செய்யுட்கள். இந்தச் செய்யுட்கள் எல்லாம், பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது' என்னும் ஒரு துறை பற்றியே வருவன. இதனையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும். 1. நீரோடு அலமரும் கண் 'அன்பே! நின்னைப் பிரிந்து யான் ஏப்படி வாழப்போகின்றோன்? என் உயிர் உடலின் நில்லாது அழிந்து போய்விடுமே!’ என்று தேம்பிநிற்கின்றாள், தலைவி. ‘என் மனைவி நீ எனக்கு வருகின்ற பெருமையிலே நினக்கும் பங்கு உண்டு. நின் கணவன் கடமை தவறியவன்;