குயில் கேட்கிறது
113
சங்கம்’ ஒன்றை நிறுவி, அந்தச் சங்கத்திற்குத் தாங்களே தலைவராகி விடுகிறார்கள்.
அதற்குப் பின்....
‘விசிட்டிங் கார்’டில் அவர் எழுத்தாளர் தலைவர், ‘லெட்டர் ஹெட்’டில் அவர் எழுத்தாளர் தலைவர், வீட்டு முகப்பில் தொங்கும் போர்டில் அவர் எழுத்தாளர் தலைவர், ‘ஆண்டு விழா’வுக்குத் தலைமை தாங்க வரும் அமைச்சரை வரவேற்றுப் பேசும்போது அவர் எழுத்தாளர் தலைவர், ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போது அவர் எழுத்தாளர் தலைவர்...
எழுத்து?...
அது தான் அவரைக் கைவிட்டு விட்டதே!
இலக்கிய உலகில் புகழ் தேடும் படலம் இது; கலை உலகில்?...
புகழோடு பொருளும் பெரும் அளவில் சேர்க்க வாய்ப்பிருப்பதால் அவற்றுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறீர்கள்; எதை வேண்டுமானாலும் இழக்கிறீர்கள். அவற்றைச் சொல்ல நாக் கூசும்; எழுதக் கை கூசும். என் நன்மைக்காகவும், படிப்பவர்கள் நன்மைக்காகவும் அவற்றை இங்கே சொல்லாமல் விடுகிறேன். மன்னிக்க. இது உங்கள் கதை; என் கதை?...
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நான் உங்கள் வாழ்வில், இலக்கியங்களில், இதிகாசங்களில்—ஏன் புராணங்களில் கூட இடம் பெற்று வருகிறேன். என்னைப் போற்றிப் புகழாத ஆழ்வார்கள் கிடையாது; நாயன்மார்கள் கிடையாது; கவிஞர்கள் கிடையாது; கலைஞர்களும் கிடையாது.