6. மாடு கேட்கிறது
‘மாடு’ என்றதும் நீ காளை மாட்டை நினைத்துக் கொண்டுவிடாதே! சற்று நின்று உன்னுடன் பேச அதற்கு எங்கே நேரம் இருக்கிறது? உனக்காக ஏர் உழவும், வண்டி இழுக்கவுமேதான் அதற்கு நேரம் சரியாயிருக்கிறதே!
பகலில்தான் இப்படியென்றால் இரவிலாவது நீ அதைச் சும்மா விடுகிறாயா? இல்லை; பொழுது விடிந்ததும் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்னிரவிலோ, பின்னிரவிலோ வண்டி நிறைய ஏதாவது ஒரு விளைபொருளை ஏற்றிக்கொண்டு நீ கிளம்பிவிடுகிறாய். உனக்கென்ன, நீ ராஜா! தூக்கம் வந்தால் வண்டியிலேயே படுத்துக்கொண்டு தூங்கி விடுவாய். மாடு? — தூக்கம் வந்தாலும் அதை உதறி விட்டு வழி தெரிந்து நடக்க வேண்டும். நடந்து, உன்னையும் உன் விளைபொருளையும் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சந்தையில் சேர்க்க வேண்டும்.
பாவம் இப்படி உழைக்கிறதே அந்த மாட்டுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டா? இல்லை; அது உனக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்பதற்காக நீதான் அதைக் காயடித்து விட்டுவிடுகிறாயே?
என்ன சுயநலம்!
நான் பசு; உங்கள் வணக்கத்துக்குரிய பசு, அப்படியென்று நான் சொல்லிக் கொள்ளவில்லை;
ஓ.-3