பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



சாந்தி நிகேதனும் தாகூரும்

போல்பூர் நகரிலே இருந்து இரண்டு மைல் தூரத்தில், அவரது தகப்பனார் தேவேந்திர நாத் ஓர் ஆசிரமம் கட்டி இருந்தார்! அங்கே அவர் அடிக்கடி சென்று அமைதியை நாடுவார்! சில நாட்கள் தங்கி இருப்பார். அந்த ஆசிரமத்திற்கு அவர் தந்தை சூட்டிய பெயர் சாந்தி நிகேதன்! இன்றும் உலகம் போற்றும் ஆலயமாக சாந்திநிகேதன் விளங்குகின்றது.

அந்த சாந்தி நிகேதனுக்கு ரவீந்திரர் தனது தந்தையுடன் 1873-ஆம் ஆண்டு சென்றார். அப்போதுதான் அவருக்கு வெளியுலகம் என்றால் என்ன என்பது புரிந்தது.

சாந்திநிகேதன் முழுவதையும் ரவீந்திரர் சுற்றிப் பார்த்தார். அங்கே தவழ்ந்த தட்ப வெட்பத்தையும், இதமான சாந்தி நிலையையும் கண்டு வியந்தார். தனது தந்தை காலை விடியுமுன்பு எழுந்து, அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதையும் அவரது வழிபாட்டையும் பார்த்து அவரும் ஒருவித மனத்தெம்பு பெற்றார்.

இவற்றையெல்லாம் ரவீந்திரர் அன்றே மிகக் கூர்ந்து கவனித்ததால் தான் பிற்காலத்தில் அவர் பெரியவரான பிறகு, தனது தந்தையார் வழிபட்டுவந்த தியான இடத்தை அவரது நினைவுக்குரிய சிறந்த அடையாளமாகப் போற்றி அமைத்தார்.

அவரது தந்தையார் தியானம் செய்த இடத்திலே இருந்த இரண்டு மரங்களை இன்றும் சாந்தி நிகேதன் செல்வோர் காணலாம். அந்த மரங்களுக்கு இடையே தனது தந்தை யாருக்குரிய நினைவு மண்டபத்தை அமைத்துள்ளார்.