பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

காற்றிலே நறுமணம் மிதந்து வருகிறது; பறவைகளின் ஒலி வருகிறது; பாட்டும் மிதந்து வருகிறது. ஒலி பெருக்கியின் வல்லமையால் பெரிய வடிவம் எடுத்து வருகின்ற பாட்டை நான் இங்கே குறிப்பிடவில்லை. கழனிகளின் இடையிலே, நாட்டுப் புறத்திலே, வேலை செய்யும் இடத்திலே கள்ளங்கபடமற்ற எளிய உள்ளங்களின் துடிப்பாக வருகின்ற எளிய பாடல்களைப் பற்றியே இங்கு பேசுகின்றேன்.

நாடோடிப் பாடல்கள் ஒவ்வொரு நாட்டின் தனி உடைமை. அவை அந்த நாட்டின் ஆணிவேராக நிற்கும் மக்களின் பண்பையும் ஆர்வத்தையும் மனப்போக்கையும் நிலையையும் பிரதிபலிக்கின்றன.

இந்தப் பாடல்களை யார் உண்டாக்கினார்கள் என்று கூற முடியாது. இவை எப்படியோ தோன்றி நாடெங்கும் உலவுகின்றன.

இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாடோடிப் பாடல்களை நான் பல ஆண்டுகளாக முயன்று சேகரித்தேன். எங்கள் ஊர் ஒரு கிராமம். அங்கே செல்லும்போதெல்லாம் சில பாடல்கள் எனக்குக் கிடைக்கும்.

நான் பல ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி செய்தேன். அந்தக் காலத்தில் விடுமுறைக்காகச் செல்லும் மாணவர்களிடம் நான் ஒரு விஷயம் கூறத் தவறமாட்டேன். அவர்களுடைய ஊர்ப்புறங்களில் பாடப்பெறும் நாடோடிப் பாடல்களைக் கேட்டு எழுதிக்கொண்டு வரும்படி அவர்ககளிடம் சொல்வேன். மாணவர்கள் பலர் ஆர்வத்தோடு பல பாடல்களை எழுதி வந்து கொடுத்தார்கள். அப்பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல்களுக்கு விளக்கம் எழுதியது தான் எனது பங்கு. பாடல்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. அவற்றை எழுதியவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது. பாடல்களை எளிதில் உணர்த்து கொள்ளுவதற்கு உதவியாக இருக்குமாறு குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருக்கிறேன். நீண்ட விளக்கம் தேவையில்லை என்பது எனது எண்ணம்.

நாடோடிப் பாடல்களிலும் அவற்றின் எளிய இசையிலும் ஒரு தனிப்பட்ட கவர்ச்சியிருப்பதை இப்பாடல்களைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

பெ. தூரன்