பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிறக்கும். சுற்றத்தார் சுற்றமாகச் சூழ்வர் – வாழ்க்கையில் அமைதி இருக்கும். மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும்!

நல்ல வண்ணம் இல்லறம் அமைய இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று, அன்பு, பிறிதொன்று, அறம், அன்புள்ள செல்வி குடும்பத்தலைவி, அன்பின் பிரதிநிதி குடும்பத்தலைவன் அறத்தின் பிரதிநிதி. அன்பு–பண்பு. அறம்–பயன்.

அன்புள்ள செல்வி! அன்பு, அர்ப்பணிப்புத் தன்மையுடையது. நெகிழ்ந்து கொடுப்பது வாழ்வித்து வாழ்வது. அன்பு, ஒரு பண்பு, அறம், வாழ்க்கையின் இலட்சியம்; குறிக்கோள் அறம் செய்ய உடல் வலிமை தேவை; வன்மை தேவை; துணிவு தேவை. புறத்தில் நெகிழ்ந்து கொடுத்தல் இயலாது. அன்பு என்ற பண்பின் உறைவிடமாகக் குடும்பத் தலைவி விளங்கினால் குடும்பத்தில் இன்பச் சூழல் அமையும்; அமைதி நிலவும்; உண்பன கிடைக்கும் ! ஊரவர் கேண்மையும் கிடைக்கும். அன்பு, குடும்பத்திற்கு உயிர், அறம் பலரையும் வாழ்விப்பது. ஈதல், அறம் அறநெறிபேனும் குடும்பத் தலைவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் அரணாவான். வாழ்க்கையின் பயனே அறம். இல்லற வாழ்க்கையையே அறம் என்பார் திருவள்ளுவர். “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்று திருக்குறள் இல்லற வாழ்க்கையைப் போற்றுகிறது. ஆயினும் அந்த இல்லறம் பிறர் பழிக்க இயலாதவாறு அமைதல் வேண்டும். அன்பின் பிரதிநிதியாக வாழ்ந்த கண்ணகி, காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலிய மாதரசிகளை முன்னுதாரணமாகக் கொள்க. ஆனால், இந்த மாதரசிகளின் வாழ்க்கையில் வாய்த்த கணவன்மார்கள் அறத்தின் பிரதிநிதிகளாக இருக்கத் தவறி விட்டார்கள். ஆயினும் பொறுத்தாற்றும் பண்புடன் – தத்தம் கணவன்மார்களை நெறிப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இளமை மீதூர எளியராகி – ஒழுக்கநெறி தவறிய திருநீலகண்டரை அவர்தம் மனைவி நெறிமுறைப்படுத்திய