பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எண்ணங்கள், முடிவுகள், ஆர்வங்கள், உடலை இயக்கிச் செயற்படுத்தும்.

“வினை” என்ற தமிழ்ச்சொல் மத முத்திரை பெற்ற பின், ஒரு சிறு பொருளைக் குறிப்பதாக, பெருவழக்கில் வந்துவிட்டது. பெருவழக்காயினும் தவறு, தவறுதான்! தவறு கூடச் சொல்லில் இல்லை. அச்சொல்லை, கேட்புழிப் பொருள் கொள்ளும் பாங்கிலேயே தவறு ஏற்படுகிறது.

‘வினை’ என்பது செயலைக் குறிக்கும். தமிழிலக்கணத்தில் “வினைச்சொல்” செயற்பாட்டினைக் குறிக்கும் சொல் என்பது எண்ணத்தக்கது. ஆதலால் வினை என்பது ஒருவர் மனம், புத்தி, சிந்தனை, புலன், பொறிகளால் இயங்கிச் செய்யும் செயல்களைக் குறிக்கும். அச்செயல்களின் பயன் துய்ப்புக்கு வரும்பொழுது வினைப்பயன் என்றாகிறது.

ஒவ்வொருவரும் அவரவர் உழைப்பின் பயனை அடைய விரும்புவதே உலகியற்கை ஒருவர் உழைப்பை மற்றவர் எடுத்துக் கொள்வதைச் “சுரண்டல்” என்று கண்டிக்கின்றோம். ஆனால், ஒருவர் தீமையைச் செய்தால் அதன் பயனை அனுபவிப்பதற்கு விரும்புவதில்லை. இது ஏன்?

நல்லதாயின் மகிழ்வு; இன்பமாயின் இதயக்களிப்பு பெறுவர். துன்பமாயின் ஏன் வெறுப்பு? அத்துன்பமும் வேறு யாரும் தந்ததில்லையே! அவரவர் படைத்துக் கொள்வது தானே! இதனைத் திருக்குறள்,

“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?

என்று கேட்கும். உயிரின் இயற்கை உயிர்த்தல்; செயற்படுதல்; வளர்தல்; உய்தல். உயிரின் இயக்கங்கள் செயற்பாடுகள் பலதுறையின, பலவகையின. ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு முதல் பத்து வரையிலான செயல்களில் ஒன்றோடொன்று