பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

137



ஊழையும் வெற்றி பெறலாம்!

ஊழின் பயனை எதிர்த்துப் போராடுதல் என்றால் என்ன? நல்லூழாயின் இன்புறு நலன்கள் எய்தும். வாழ்க்கை இன்பமாயினும், அதனை மருந்து எனக் கருதியே துய்த்தல் வேண்டும். உடற் பிணிக்குரிய மருந்தில் இனிப்பு, சுவையுடையதாயினும் அளவுக்கு மேல் தின்னல் தீது பயக்கும்.

ஆதலால், உலகில் யாரும் இனிப்பை அதிகமாகத் தின்றதும் இல்லை. அதுபோலத்தான் இன்பங்களும் கூட. இன்பத்தில் அளவு கடந்த மகிழ்வெய்தி, பற்றுள்ளத்துடன் துய்த்தல் கூடாது. அங்ஙனம் துய்த்தால் அது-அதாவது நல்லூழின் துய்ப்பு, தீயூழாக மாறி, பயன் விளைவித்தற்குரிய வாயில்கள் அமையும். அதோடு ஒன்றை இன்பமென மூழ்கி, மயங்கித், தருக்கித் துய்க்கும்காலை அத்துய்ப்பு முறை, மற்றவர்களிடத்தில், அழுக்காற்றையும் அவாக்களையும் தோற்றுவித்துப் பொருதலை உண்டாக்கும்.

இன்பத் துய்ப்பை, பற்றற்ற நிலையில் காய்தலும் களித்தலுமின்றிக் கடமையுணர்வோடு துய்க்க வேண்டும். இங்ஙனம் துய்க்கும் பொழுது, அனுபவிக்கும் ஊழ், பின் தொடர்ச்சியின்றிக் கரைகிறது. எதிர் விளைவுகளை உண்டாக்காமலும், அமைகிறது. இது, நல்லூழை வெற்றி கொள்ளும் முறை.

தீயூழ், துன்பத்தைத் தரும். துன்பம் கண்ட பொழுதும் கலக்கமுறாமல் அத்துன்பத்தை நடுக்கமற்ற நெஞ்சுடன் அனுபவிக்க வேண்டும். சாதலைவிட, சாதலைப் பற்றிய எண்ணம் துன்பமானது; துன்பத்தை விளைவிப்பது என்பது ஒரு கருத்து. ஆதலால் துன்பத்தை, கவலையாக்காமல் அழிவுக்குரிய வாயிலாக ஆக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், துன்பத்தை அறைகூவல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.