பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

147


தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மையீ ரோதிக்கு மாண்புற அணிந்து
கூடலும் ஊடலும் கோவலற் களித்துப்
பாடமை சேர்க்கைப் பள்ளியுள் இருந்தோள்”

(கடலாடு காதை - 75-110)

என்ற அடிகளால் அறியலாம்.

இந்த அச்சம் மாதவிக்கு இயல்பான வழிவழிப் பழக்கத்தாலும் வந்தது. இந்த அச்சத்தின் விளைவாகிய ஊழ் துய்ப்பாகிறது. ஒரு பெண்ணின் கற்புத்திறத்திற்கு அவளுடைய கணவனே காரணம். “கணவனாகிய ஆடவன் முறைபிறழ்ந்தால் பெண்ணின் முறைபிறழ்வுக்குக் காவல் ஏது?” என்று கோவலனுக்கு உணர்த்தும் நோக்கத்தோடு பாடுகிறாள். மாதவி கற்பனையும் கோவலன் கற்பனையைச் சார்ந்தே, சோழப் பேரரசைச் சுற்றி வட்டமிடுகிறது.

கோவலன் காவிரிக்குச் சிறப்புத்தந்து அது புலவாதிருக்கிறது என்று பாடினான். மாதவி, காவிரியின் புலவாத் தன்மைக்கும் நிறை நலத்திற்கும் சோழனின் செங்கோலே காரணம் என்று சிறப்பித்துத் தொடர்ச்சியாகக் கோவலனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவள் போலவும், அவன் பிரியாத பெரு நெறியில் நிற்க வேண்டும் என்ற பொருள் படவும் பாடுகிறாள்.

‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அது போர்த்துக்
கருங்கயற் கண் விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்கயற் கண் விரித் தொல்கி நடந்த வெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன் வாழி காவேரி!

(கானல்வரி-25)