பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூற்றாண்டின் - ஏன் அதன்பின் வரும் நூற்றாண்டின் புதுமைக் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்.

நாமார்க்கும் குடியல்லோம்

உலக மக்கள் எல்லாரும் ஒருவரின் குறிப்பிட்ட ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கட்டுப்பட்டுக் கிடக்காமல், அவர்களுடைய நலனுக்குகந்த ஆட்சி மலர வேண்டும் என்று கூறுவது ஓர் அரசியல் இயக்கம். இந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்கி வைத்த தலைவர்கள் - பெரியார்கள் உலகின் வெவ்வேறு கோடிகளிலே வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் ‘உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட மன்னனுடைய எதேச்சாதிகாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். மக்காளட்சி மலரவேண்டும்’ என்ற கருத்திற்காகவே போராடி வந்திருக்கிறார்கள். அந்தப் போராட்டத் தலைவர்களின் வரிசையிலே நமது அப்பரடிகளுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு! கொடி கட்டி ஆண்ட பல்லவப் பேரரசனை எதிர்த்து அப்பரடிகள் “நாமார்க்கும் குடியல்லோம்!” என்று முழங்கியதே அதற்குச் சான்றாகும்.

விடுதலை வீரர்

காஞ்சியிலே பல்வ மன்னன் கொடிகட்டி ஆளுகிறான். அவன், நமது அப்பரடிகளை அழைத்து வருமாறு ஆளனுப்புகிறான். அரசனின் ஆணையாயிற்றே என்று கருதி, அவர் மன்னனை நோக்கி ஓடவில்லை. “நாம் யார்க்கும் குடியல்லோம் எமக்காக ஆட்சியே யன்றி ஆட்சிக்காக நாமல்ல” என்று ஏழாம் நூற்றாண்டிலே அவர் உரிமை முழக்கம் செய்ததை அறிகிறோம். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற அப்பரடிகளின் அடியைத் தொடர்பாக வைத்துத் தான் இருபதாம் நூற்றாண்டில் பாரதியார்,