பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

177


என்று குறிப்பிடுகின்றார். அந்த ஏழாம் நூற்றாண்டில் ஆங்கிலம் இல்லை; ஆங்கிலத்தைப் பற்றிய பிரச்சனை இல்லை. எனவே ஆங்கலத்தைப் பற்றிப் பேசவும் இல்லை. ஆங்கிலம் இடைக்காலத்தேதான் வந்தது. இடைக்காலத்திலேயே போகவும் போகிறது. அதைக் கட்டி அழுவதாலே நமக்குப் பெரும் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை. காரணம், ஆங்கிலத்தில் சிலரே பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

பாரதத்தில் ஏறத்தாழப் பத்து விழுக்காட்டினரே ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றிருப்பார்கள். அன்று - அந்த நூற்றாண்டில் நமது பாரத நாட்டை - இந்திய நாட்டை இணைத்த மொழிப் பாலங்கள் வடமொழியும், தமிழ் மொழியுமேயாகும்.

வடக்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழைப் பயில ஆரம்பித்தார்கள். தெற்கே இருந்தவர்கள் அனைவரும் வடமொழியைப் பயில ஆரம்பித்தார்கள். மொழி உறவு, மொழிப்பாலம் அமைந்தது. இதனையே இந்த மொழி ஒருமைப்பாட்டையே “வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்” என்று குறிப்பிட்டார் நமது அப்பரடிகள். ‘ஆரியமோடு தென் தமிழ்’ என்றார். இவ்விரு மொழிகளுக்குள்ளும் உறவு வளர வேண்டும்; கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்ற கருத்தைப் பார்க்கிறோம். இது மொழி ஒருமைப்பாடு.

மனிதகுல ஒருமைப்பாடு

அடுத்து மனிதகுல ஒருமைப்பாடு பற்றியும் அப்பரடிகள் குறிப்பிட்டிருக்கிறார். இன்று, அணுகுண்டு யுகத்தில் உலக ஒருமைப்பாடு பற்றிப் பேசுகிறோம். அன்று, அப்பரடிகள் மனிதகுல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார் என்றால் தலையிலே குண்டு விழும் என்ற அச்சத்தின் அடிப்படையிலே அன்று. நியாயத்தின் அடிப்படையிலே - இலட்சியத்தின் அடிப்படையிலேதான் அவர் மனிதகுல

கு.இ.VII.12.