பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீதியால் தொழுக

79



இறைவன் துலாக்கோலனையன், வேண்டுதல் வேண்டாமையிலாதவன், நீதியின் வடிவம். இல்லை அவனே நீதி! நீதி மனித உலகத்தைத் தழுவியது. இல்லை! நீதி உயிர்க் குலமனைத்தையும் தழுவியது. உயிர்க்குலமனைத்துக்கும் ஊறு செய்யாத தத்துவமே நீதி. உயிர்க்குலத்திற்கு இயல்பியல் அன்பு காட்டுவதே நீதி. உயிர்க்குலத்தைக் காக்க அவசியம் ஏற்படும்போது தம்மை ஒறுத்துக் கொள்ளுதலே நீதி. நீதி உழைப்பைக் கவர்வதில் மகிழ்வதல்ல; உழைப்பில் மகிழ்வது. நீதி துய்ப்பில் மகிழ்வதல்ல; துறவில் மகிழ்வது. நீதி தற்சார்பைச் சார்ந்ததல்ல; நீதி இன்புறுத்துவதில் இன்புறுவது; நீதி வாழ்விப்பதில் வாழ்வது. இத்தகைய சீலம் நிறைந்த நீதியாய் வாழ்கின்ற வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழு; வினைச் சார்பு வராது என்கிறார் திருஞானசம்பந்தர். ஆம், செயல் புரிவது உயிரின் இயற்கை, செயல் மாண்டு அடங்குதல் எளிதன்று. செயலில் தவம் செய்தலே நம்மனோர்க்குச் சாலும். அதாவது வினை செய்தலில் தவம் செய்தலே நம்மனோர்க்கு இசைந்தது. வினை செய்தால் அவ்வழி பற்றும் பாசமும், இன்பமும் துன்பமும் வரத்தானே செய்யும்! அவ்வழி உயிர் மன அலைவுகளுக்கு ஆளாகும். ஆனால் நீதியால் நின்று வினை செய்யும் பொழுது அந்த வினை செயலைப் பெருக்குவதைவிட செயல் மாண்டடங்கத் துணை செய்கிறது. ஆதலால் செயல் செய்க! தற்சார்பான செயல்களைத் தவிர்த்திடுக! உலகுயிர் தழைத்தினிது மகிழ்ந்து வாழச் செயல் செய்க! அதுவே, இறைவனைத் தொழும் முறை என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்பினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.