பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

49

காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசையில்லையடா..!
பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!
ஆசை தருங் கோடி யதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

இப்படி ஒர் அற்புதமான பாட்டுத் திறத்தைப் பெற்றிருந்த குயில், பாவலனையும் காதலித்து மாட்டையும் குரங்கையும் காதலித்து, இவர்கள் மூவருமே தன்மேல் காதல் பித்தேறித் திரியச் செய்கிறது. இந்தக் குயிலை நாணமிலாப் பொய்க் குயில் என்று கூறிய பாரதியார் இதன் முற்பிறப்பை முனிவர் வாயிலாகக் கூறும்போது, மூன்று பேரிடமும் காதல்மொழி பேச நேர்ந்ததற்கு-முன்பிறப்பினால் ஏற்பட்ட விதியே காரணம் என்று கூறித்தான் முற்பிறப்பு வரலாற்றைத் தொடங்குகிறார். -

இப்பிறப்புக் குயில் தன்னைக் கண்ட ஒவ்வொருவரையும் காதலிக்கிறது. அவர்களைத் தன் மீது பெருமோகம் கொள்ளச் செய்கிறது. இந்த நாணமிலாச் செயல் ஒன்றே செய்கிறது. முற்பிறப்புக் குயில்-அதாவது சின்னக் குயிலி-மோசம் நாசம் நீலிவேசம் என்றவற்றிலே திறனுடையதாக விளங்குகிறது.

முதலில் மாமன் மகனைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புகிறது.

மாலையிட வாக்களித்தாய்
    மையலினால் இல்லை; அவன்
சால வருந்தல்

    சகிக்காமல் சொல்லிவிட்டாய்!

இது உண்மையான காதலினால் கொடுத்த வாக்கல்ல; மாடன் மீது கொண்ட இரக்கத்தால் என்கிறார்.