பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

61

பாரதியார் தெய்வீகம் போற்றி னாலும்
       பழமையிலே வெறுப்புடையார்; நாடு காக்க
வீரர்களே வேண்டுமெனும் புரட்சி நோக்கர்
       வெறும்பஜனைக் கூட்டத்தை வெறுக்கும் சீலர்
தேரெனினும் விரைந்தோட வேண்டு மென்னும்
       சிந்தனையில் ஞானத்தேர் உலாவந் தாராம்
யாரிவரென் றறிந்தேதான் தாச னானார்
       அரட்டுகின்ற பார்வையுள்ள புரட்சி வேந்தர்.

ஏய்த்துத்தான் உயிர்வாழ வேண்டுமென்றே
       எவர்முயன்று வாழ்ந்தாலும் கடிந்து நிற்கும்
காய்த்தெழுந்த நெஞ்சத்தான் பார திக்குக்
       கனகசுப்பு ரத்தினம் தான் தாசனானான்!
வாய்த்துள்ள உயிரிங்கே நாட்டுக் காக
       வழங்கிடலே சிறந்ததென்னும் கருத்தில் இந்தச்
சேய்த்தமிழர் இருவரிலும் வேறு பாடு
       சிறிதுமில்லை! ஐயமில்லை! உண்மை காணீர்!

பாரதத்தை ஆண்டுவந்த வெள்ளைக் காரப்
       பரங்கியரை ஒட்டுதற்குத் துடித்த நெஞ்சும்
சீரதிக முடைய தமிழ் நாட்டில் இங்கே
       சிலர் வாழப் பலர்மாயும் நிகழ்ச்சி கண்டு
நேர்மையுடன் கொதித்ததன் மான நெஞ்சும்
       நிகரில்லை என்றெவரே கூற வல்லார்
பாரதிக்குத் தக்கதொரு தாசன் தானே
       பண்புடைய கனகசுப்பு ரத்னம் காணீர்!