பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

குயிலும்...சாரலும்

வில்லாளி அருச்சுனனைப் பார திக்கு
     மிகப்பிடிக்கும் உயர்வீரன் என்ப தாலே!
சொல்லாலும் செயலாலும் வாய்மை காத்துத்
     தோற்றாலும் பணியாத நெஞ்சங் கொண்ட
வல்லானாம் இராவணனைப் பாவேந்தர் தம்
     வழிமுதல்வன் எனவீர வணக்கம் செய்வார்!
வல்லாண்மை மிக்க இரு கவிஞர் கட்கும்

     பகைமுடிக்கும் வீரரையே மிகப் பிடிக்கும்!


தலைப்பாகைச் சுடர்விழிகொள் பார திக்குத்
     தமிழ்ப்பெண்ணின் விடுதலையே நோக்க மாகும்!
சிலைபோன்ற பெண்ணுக்குக் கைமை நோன்பு
     சிறைப்படுத்தும் கொடுமையெனத் தாசன் கூறும்!
அலைகின்ற இருநெஞ்சங் காதல் கொண்டே
     அன்பாக அணைகின்ற வாழ்வு தானே
நிலையான இன்பத்தை யளிக்கு மென்று

     நினைப்பவர்கள் இருவருமே ஒருநோக் குள்ளார்.


பக்தியிலே சக்தியுண்டென் றெண்ணி னாலும்
     பழமூடப் பழக்கத்தைச் சாடி நிற்கும்
மிக்கபுதுக் கொள்கையிலே ஊறி நிற்கும்
     மீசையுள்ள பாரதிக்குத் தாசன் எந்தப்
பக்கத்தில் வந்தாலும் மூடப் போக்கைப்
     பாய்ந்தெதிர்க்கும் வெறியுள்ளான் ஆகை யாலே சிக்கென்று பாரதியைக் குருவாய்க் கொண்டான்

     சிங்கத்தைப் பின்பற்றும் சிங்க மானான்!