பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 81


பிரதானி தாண்டவராய பிள்ளை மன்னர் சசிவர்ண பெரியஉடையாத் தேவர் ஆட்சியின் இறுதியில் கி.பி.1747-ல் சிவகங்கைப் பிரதானியாகப் பணியேற்றார். அப்பொழுது அவர் சுமார் நாற்பது வயது உடையவராக இருந்திருக்க வேண்டும். இவரது அருங்குணங்களையும், ஆற்றலையும் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமினாதையர் அவர்கள்,

"... தாண்டவராயபிள்ளை வீரமும், கணக்கில் நுட்பமும், தெளிந்த அறிவும், இன்னாரை இன்னபடி நடத்த வேண்டும் என்ற தகுதியுணர்ச்சியும் சமஸ்த்தானத்தின் வளங்களை மிக்கும் வழிகளையறிந்து முயலும் முயற்சியும் தைரியமும் உடையவர். தம்மை அடுத்தவரைப் போல் ஆதரிப்பவர். சொன்ன மொழி தவறாத வாய்மை உடையவர். துட்டரை அடக்கி அஞ்சச் செய்யும் பராக்கிரமம் பொருந்தியவர். தமிழ்ப் புலவர்களை ஆதரிக்குந் தன்மையினர்."

என புகழ்ந்து வரைந்துள்ளார்.[1]

இத்தகைய ஏற்றமிகு தமிழ்ப் பெருமகனைப் போற்றி புகழ்வது இயல்பு. "எடுக்கும், இருநிதியும் நெல்லாயிரம் கலமுந் தந்தே, நாடு கவிதை கொண்டு புகழுற்றோன்" என்று பாடியதுடன் அல்லாமல், இவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு "மான்விடு தூது" என்ற சிறந்த செந்தமிழ் இலக்கியத்தையே படைத்துள்ளார் குழந்தைக் கவிராயர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயரது பேரர். இந்த இலக்கியத்தில் இருந்து பிரதானி தாண்டவராய பிள்ளை சிவகங்கைச் சீமையில் எத்தகைய அறப்பணிகளை நிறைவேற்றி வைத்தார் என்பதையும் அறிந்து கொள்வதற்கு கவிராயரது கவிதை வரிகள் பயன்படுகின்றன.

“கோலமிகு குன்றக்குடியிலே நீடுழி
காலமெல்லாம் நிற்கவே கற்கட்டிக் குளத்தில்
தன்னுற்றுக் காணத் தடாகப் பிரதிட்டை செய்து
செந்நூல் துறையால் சினகரமும் - பொன்னால்
படித்துறையு பூந்தருவும் மைந்தருவும் வேதம்
படித்துறையு மண்டபமும் பாங்காய் - முடித்து வைத்தே
போற்றிய வையாபுரியுயென்று பேருமிட்டு
நாற்றிசையோர் போற்றுவள்ளி நாதருக்கே - தோற்றுதினக்
கட்டளையுந்த துவாதசி க்கட்டளையுந் தைப்பூச
கட்டளையுமே நடத்துங் கங்கைகுலன் - மட்டுவிரி
சீதளியார் புத்துர்த் திருத்தளியார் கொன்றைவன


  1. குழந்தைக் கவிராயர் - மான் விடு தூது (டாக்டர் உ.வே.சா. பதிப்பு) 1954 பக்: 12