பக்கம்:செவ்வானம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 19 மேலே, சுவர்களில் கிடந்த படங்கள் மீதிலே அவர் கவனம் பதிந்து விடவில்லை. வேறு இன்ப நினைவுக் கொதிப்புகளால் அவர் துயில் இழந்து துன்புறவில்லை. இரவில், தனியறையில் படிப்பில் ஆழ்ந்திருக்கும்போது அமைதியைக் குலைத்துக் கவனத்தைக் கலைத்து எரிச்சலை மூட்டும் ஒற்றை.ஈ மாதிரி வழி தெரியாமல், செய்யும் வகையறியாமல் சுழன்று தொல்லைப்படுத்தும் குருட்டு ஈபோல - ஒரேநினைவு அவர் உள்ளத்தில் குடைந்து குறுகுறுத்துக் கொண்டிருந்தது. நீங்காத எண்ணம் ஒன்று எரியூட்டும் நெருப்பாய் சுட்டுக்கொண்டிருந்தது அவர் இதயத்தை. மண்டையிலே கொதிப்பேற்படுத்தியது. ...அவன், அந்தப் பொறுக்கி, வீணப்பயல், தன் வெறும் பயவேலையைக் காட்டிவிட்டான். அவனுக்கு இடமளித்தது தப்பு அழைப்பு அனுப்பியது பெரிய தப்பு, மகாத்தப்பு அவனுக்குப் பேச அனுமதி அளித்தது. அழைப்பு அனுப்பினதினாலே என்ன கெட்டுப்போச்சு? ஊரிலே பலபேருக்கும் தெரிந்தவனாகியிருக்கிறானே. நல்லா எழுதுகிறான். ஏதோ பேசிப் பெயர் பெற்றிருக்கிறான். ஆயிரத்தோடு ஆயிரத்தொண்ணாவது நபராக அவனுக்கும் அழைப்பு போனதிலே என்ன தவறு? அப்போ அவனைப் பேசச் சொன்னதிலும் தவறு இல்லைதான். தலைமை வகித்தவரின் பாராட்டுதலைப் பெற்ற பிரபலஸ்தன் என்ற முறையிலே அவனைப்பேச அனுமதித்தது. போகிறது. அந்தக் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை கழுதைக்கு கழுதை மாதிரிகத்தித் தீர்த்து விட்டான். ஆனால் நம்ம மானத்தையல்லவா வானத்துக்கு அனுப்பி விட்டான் மடையன். அவனை லேசில் விடப்படாது. சும்மா விடப்படாது. என்னவாவது செய்து அவனை சரியான வழிக்குக் கொண்டுவர வேண்டும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/21&oldid=841381" இலிருந்து மீள்விக்கப்பட்டது