பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இரண்டாஞ் சூத்திரத்தொடர் மேற்குறித்த ‘ஆணையாஞ் சிவத்தை எனவரும் சேக்கிழார் வாய்மொழியை அடியொற்றி யமைந்ததாகும். புறப்பொருளை நோக்காது பேரறிவு மாத்திரமாய் நிற்கின்ற முழுமுதற்பொருளே சிவம் எனவும் அச்சிவம் உயிர்களுக்குப் பசுத்துவத்தை நீக்குவதிற் கொண்டுள்ள அருளே சத்தி எனவும் கூறப்படும். "தன்னை விளக்குவது உம் விடயங்களை விளக்குவதும் தானேயாகிய ஞாயிறு ஒன்று தானே விடயங்களை விளக்குழிக் கதிர் எனவும், தன்னை விளக்குழிக் கதிரோன் எனவும் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் அது போலப் புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல் பின் நிற்பது உம் புறப்பொருளை நோக்கி நின்றுணர்த்துவது உம் ஆகிய இரண்டியல்புடைய பேரறிவாகிய சைதன்னியம் ஒன்றே அங்ங்னம் புறப் பொருளை நோக்கி நிற்கும் நிலையிற் சத்தி எனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரமாய் நிற்கும் நிலையிற் சிவம் எனவும், தாதான்மியத்தான் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் எனச் சிவஞானமுனிவர் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கதாகும். சிவயோகிகள் நிலமுதற் சிவeறாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் படிமுறையானே ஏறிக்கடந்து சிவத்தை அணையுமாறு போலத் திண்ணனாரும் கீாளத்தி மலையிற் படிவழியே ஏறிச்சென்று குடுமித் தேவரைச் சார்ந்தார் எனச் சைவசித்தாந்தத் தத்துவ வுண்மையினை உவமையாகச் சேக்கிழார் எடுத்தாண்டுள்ள திறம் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் உயிர்களை அநாதியே பற்றியுள்ளன என்பதும், முற்றுணர்வும் வரம்பிலாற்றலும் பேரருளும் உடைய இறைவன் உயிர்களை அநாதியே பிணித்துள்ள மலப்பிணிப்பு நீங்க உயிர்களுக்கு உலகு உடல் கருவி நுகர்பொருள்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுத்து இவ்வுலகில் வாழ்வாங்கு வாழச் செய்து பாசப்பிணிப்பொழிந்து மீண்டும் பிறவாநெறியாகிய வீடுபேற்றினைத் தந்தருள்கின்றான் என்பதும், உயிர்கள் தம்மைப் பற்றியுள்ள பாசப்பிணிப்பு அகல அருளேயுருவாகிய ஈசனை அன்பினால் மறவாது வழிபடுதல் வேண்டுமென்பதும்