195
தஞ்சை மராட்டிய
செயல் வரலாற்றின் சாதனை என்றுதான் கூற வேண்டும்" என்றும், "இந்தக் கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும் கூறுவர். மேலும் 'கல்வெட்டில் மாறுபட்ட சக ஆண்டுகள் பற்றிச் சிந்தனை செய்து பார்க்க வேண்டும்' என்று கூறியவர்,
"சிவாஜி ராஜாவிற்குப் பட்டாபிஷேகம் ஆனது முதல் ஒளரங்கசீப் இறக்கும் வரையில் உள்ள எல்லாக்காலக் குறிப்புக்களும் சுமார் நான்கு வருஷ வித்தியாசம் உடையனவாம்" என்று எழுதுகிறார்.
மேலும், "அரண்மனையில் இந்த வரலாற்றுக் குறிப்புக்களின் மூலப்பிரதி இருக்கலாம் நினைக்க இடமுண்டு” என்று கூறியிருப்பதால் சாம்பமூர்த்திராவுக்கு 1907இல் அரண்மனையினின்று சுவடி கிடைத்தது என்ற செய்தி இவருக்குத் தெரியாது என்பது வெள்ளிடை மலையாகும்.
ஆ. கல்வெட்டுத்துறை
இந்த மராட்டியக் கல்வெட்டு 1924இல் கல்வெட்டுத்துறையினரால் படியெடுக்கப் பெற்றது: 1923-24ஆம் ஆண்டுக்குரிய வெளியீட்டில் 424ஆம் எண்ணாகக் குறிக்கப் பெற்றுள்ளது.[1] 1923-24க்குரிய அறிக்கையில் இரண்டாவது பகுதியில்" பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
"இச்சாஸனம் 119 பக்கங்கள் கொண்டதாகத் திரு. சாம்பமூர்த்திராவ் என்பவரால் அச்சிடப்பெற்றுள்ளது; போன்ஸ்லே வமிச சரித்திரத்தை நிரலே கூறுவது; ஷாஜியின் சாதனைகள், அவருடைய மகன் சிவாஜியின் சாதனைகள், தஞ்சை அரசர் சரபோஜி வரையில் இருந்த அரசர் செய்திகள் ஆகியவற்றைக் கூறுகிறது. சரபோஜியின் ஆணையால் இந்தச் சாஸனம் வெட்டப்பட்டது. ராண்டே எழுதிய மராட்டிய வரலாற்று நூலிலோ, டஃப் எழுதிய நூலிலோ இல்லாத பல செய்திகளைக் கூறுகிறது. மேலே கூறிய நூல்களில் தஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாறு காணப்படவில்லை. இந்தக் கல்வெட்டில் கொடுக்கப்பட்ட கால்வழி முறை செவல் எழுதிய நூலில்[2] கூறப்பட்டதற்கு முன் 15 தலைமுறையினரைக் குறிப்பிடுவதாக உள்ளது. இந்த அரிய சாஸனம் கல்வெட்டுத்துறை வெளியீடாக ஆய்வாளர்க்கு பயன்படுவதற்காக விரைவில் வெளியிடப்பெறும்.
இதற்குப் பின் சரபோஜி சுவீகாரம் எடுத்துக் கொண்ட செய்தியும். சரபோஜி பிறந்த வமிசாவளியும், கல்வெட்டுத்துறையினர் கொடுத்துள்ளனர்.[3]