பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

201


ஜெயகாந்தன் விமர்சனம் செய்யப்பட்டிருந்தார். ஆழ்ந்த அவ்விமர்சனத்தை எழுதியவர் க. வீரையன்.

உழைக்கும் வர்க்கத்துடன் ஒரு சந்திப்பு (பூம்புகார் மீனவர்கள் நிலை பற்றிய கட்டுரை), ஒரு குடியரசில் சில நாடகங்கள் ( கல்வித் துறை பற்றிய நையாண்டி சித்திரம் ), ரசிகனின் குறிப்பேட்டிலிருந்து ( சுவாரஸ்யமான நடைச்சித்திரம் ) ஒரு கதை, சில புத்தகங்களுக்கு மதிப்புரை—இவ்வளவும் இருந்தன. ஆனந்த விகடன் அளவில் 66 பக்கங்கள். ஆர்ட் பேப்பர் அட்டை அட்டையில் வர்ணச் சித்திரம் உண்டு.

இரண்டாவது இதழின் முகப்புத் தோற்றம் எடுப்பாக இருந்தது: விஷய கனம், ஆழம் என்பது குறித்து ஆ. செகந்நாதன் தெளிவான ஒரு விளக்கம் தந்திருந்தார்.

‘இன்னும் ஆழமாகவும், கனமாகவும் முழக்கம் வரவேண்டுமென்று சிலர் எழுதியுள்ளனர். இந்தக் கருத்தில் எனக்கொன்றும் முரண்பாடு இல்லை. ஆனால் ஆழம், கனம் இவற்றுக்கு அவர்கள் கற்பிக்கும் விளக்கத்தில்தான் எனக்கு உடன்பாடில்லை. எந்த விஷயம் சமுதாய விழிப்புக்கு அவசியமோ அதைச் சொந்த சிந்தனையோடு அலசிப் பார்ப்பதும், எந்த விஷயம் கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படுமோ அதை அழுத்தமாக வரைவதும்தான்— ஆழம், கனம் இவற்றின் அர்த்தங்கள் என்று முழக்கம் கருதுகிறது.

கனமாக எழுதவேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே காங்கோ காடுகளிலுள்ள ஒரு நூதன விலங்கு எப்படிக் குட்டி போடுகிறது என்று எழுதுவதால் யாருக்கு என்ன பயன் ?

எழுதப்படுகிற செய்தியைத் தாண்டிக் கொண்டு—தன்னை எப்படியாவது ஒரு அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அரிப்பில் மட்டுமே வரும் படைப்புகளை ஆழமானவை என்று ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை முழக்கத்திற்கு இல்லை. மக்களை நேரடியாகத் தொடக்கூடிய கலைத்தன்மை நிறைந்த படைப்புகளை முழக்கம் தொடர்ந்து தரும் (முழக்கம்-2).

இவ்விதம் அறிவித்த 'முழக்கம்' இதைச் செயலில் காட்டத் தீவிரமாக முயன்றதை அதன் இதழ்கள் காட்டின.

இரண்டாவது இதழில், 'வல்லிக்கண்ணனுடன் ஒரு பேட்டி' யில், தமிழ் எழுத்துலகின் தொடர்பாகச் சில சிந்தனைகள் உரையாடப் பெற்றுள்ளன.