உண்ண உழவில்லையோ, உடுக்க நெசவில்லையோ,
எண்ண அறிவில்லையோ, எதிர்க்க வீரமில்லையோ,
கன்னல் மொழியில்லையோ, களிக்க இடமில்லையோ,
என்ன குறைவுனக்கு? எல்லாம் இருக்கும்போது
தருக்குநன் னூலில்லையோ, தண்புல வோரில்லையோ,
உருக்கும் இசையில்லையோ, உய்யும் வழியில்லையோ
இருக்கும் வளங்களினால் இன்னும் பலவளமும்
பெருக்கிப் பயன்பெற்றுப் பெருமையாய் நிலவலாம்
தமிழினைத் தாழ்த்த லாமோ-தமிழா
இமிழ்கடல் உலகில் இனித்திடும் ஒருமொழி
இதுவென பாரதி இயம்பிய திருமொழி
நம்பிய தாய் தன்னை நடுவில் கெடுப்பதோ,
கும்பகோ ணத்தில்தம்பி கோதானம் கொடுப்பதோ
தமிழர் திருமணத்தில் தமிழினைத் தள்வதோ,
உமிழாது பிறமொழி உயரக் கொள்வதோ
நந்தம் கோயிலில் நந்தமிழ் தாழ்வதோ,
வந்த வடமொழி வசதியாய் வாழ்வதோ
சொந்த மொழியையே சுவைக்கா நாட்டினில்
இந்தி மொழிவேறு வந்தது போட்டியில்
உடலும் பொருள்களும் உயிருமே நின்று
கெடலில் தமிழே கேளாய் நன்று
7