பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மெய்வேல் பறியா நகும்!


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

என்பது திருக்குறளில் உள்ள ஒரு குறள். “தன்னைக் கொல்லவந்த யானையின் மீது கைவேலை எறிந்து போக்கி விட்டுப் பகைவன் தன் மார்பின்மீது எறிந்த வேலைப் பறித்து மகிழ்ந்தான்” என்பது குறளின் பொருள்.

இக்குறள் ‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் வந்துள்ளது. படைச்செருக்கு என்பது படையின் தன்மை, வீரனின் திறம், வீரனின் சிறப்பு என்றாகும்.

உலக மக்கள் பலரிடமும் காணப்படுகின்ற வீரத்திற்கும் தமிழகத்திற் காணப்பெறும் வீரத்திற்கும் வேறுபாடு உண்டு. தமிழகத்தின் வீரம் ஒரு தனிப் பண்பு வாய்ந்தது. இதனைத் தமிழ் வீரம் என்றும், தமிழர் வீரம் என்றும் கூறுவதுண்டு.

பழங்காலத்துத் தமிழ் மக்களில் ஆண், பெண் ஆகிய இரு பாலரிடத்துங் காணப்பெற்ற சிறந்த வீரச் செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும் வள்ளுவரது குறள் அதனை இன்னும் தெளிவாக்கிக் காட்டுகிறது.

தமிழர் முயல் வேட்டைக்குச் செல்லுவதைவிட யானை வேட்டைக்குச் செல்லுவதையே பெரிதும் விரும்புவர்; அவரது எண்ணம் அத்தகையது.