மெய்வேல் பறியா நகும்
59
முயலைக் கொன்று வெற்றிபெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கொள்வர்; அவரது கொள்கை அத்தகையது.
தம்மின் வலிமைகுறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன்வந்தபோதும் வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி, “போர் எண்ணங்கொண்டு என்முன் நில்லாதே, நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்” என வழிகூறி அனுப்பிடுவர். அவரது அறம் அத்தகையது.
தம்மோடு ஒத்த, அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூடப் பகை வரது வலிமை குறைந்துவிட்டால், மேலும் தாக்காமல் “இன்று போய் நாளை வா” என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது போராண்மை அத்தகையது.
போர்க்களத்தில் பகைவரை வெகுண்டு நோக்குவர். விழித்துப் பார்க்கும் அக்கண்களை நோக்கி வேல்கள் பறத்துவரும். அப்பொழுதுங்கூட, அவர்கள் விழித்த கண்களை இமைப்பதே இல்லை. அவரது போர் ஆண்மை அத்தகையது.
இவைபோன்ற பழந்தமிழ் வீரர்களின் பண்பாட்டினை திருக்குறள் நிலைத்து நின்று, இன்றும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இக்கட்டுரையின் தலைப்பில் இருக்கும் குறள் ஒரு போர் வீரனின் சிறந்த வலிமையைக் காட்டும் உயர்ந்த ஓவியமாகும்.
வீரன் போர்க்களம் புகுந்தான், அவனுக்கு வேல் ஒன்றே படைக் கருவியாக இருந்தது. பகைவனது யானை ஒன்று அவனைக் கொல்லவந்தது. அதன்மீது குறிபார்த்து வேலை எறிந்தான். யானையொடு வேலும் போய் விட்டது. வெறுங்கையனானான். அப்போது பகைவனால்