பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

திருக்குறள் புதைபொருள்


'நலத்தது' என்ற சொல்லை இங்கு எத்தனை முறை படித்தோம். அதன் பொருள் விளங்கிற்றா நமக்கு? நல்லது, நல்லது என்ற பொருளில்தானே அதை அறிந்தோம். அது தவறு. அதன் பொருள் அதுவல்ல; அதன் உண்மையான பொருள் 'நல்லதைச் சார்ந்தது' என்பதேயாகும்.

உயிர் கொல்லாச் செயலையும் தீமை சொல்லாக் குணத்தையும் வள்ளுவர் 'நல்லதைச் சார்ந்தது' என்று கூறினாரேயொழிய, 'நல்லது' என்று கூற அவருடைய உள்ளம் ஒப்பவேயில்லை. இக் கருத்தை இக் குறளில் உள்ள 'நலத்தது' என்ற சொல்லிற் காணும்பொழுது நம் உள்ள மெல்லாம் இனிக்கிறது.

கொல்லாமையும் சொல்லாமையும் நல்லதைச் சார்ந்தது என்று இக் குறள் கூறும்பொழுது, வேறு எதையோ நல்லது என்று இக் குறள் கூறுவதுபோலத் தெரிகிறது. அது எது? என ஆராயும்பொழுது பிற உயிர்களை வளர்த்து வாழ்தலும், பிறர் நன்மைகளைச் சொல்லி வாழ்தலுமே எனப் புலப்படுகிறது.

இவ்வரிய பொருளை விளக்கவே இக்குறள் தோன்றியிருக்கிறது என்பதை மலைமீது நின்றும் கூறியாக வேண்டும்.

இத்தனை பொருள்களும் இக் குறளின் ஒன்றே முக்கால் அடியில், ஏழு சீர்களில், எட்டே சொற்களில் இருக்கின்றன என்று அறியும்பொழுது, நாம் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குறளை மறுபடியும் படியுங்கள் :

        கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
        சொல்லா நலத்தது சால்பு

எப்படி இக் குறள்? இந்த ஒரு குறளே நமக்கு, நோன்பு, சால்பு, பண்பு, நேர்மை, அறிவு, ஆண்மை, உயர்வு, வாழ்வு ஆகிய செல்வங்கள் அனைத்தையும் தருமானால், இன்னும் திருக்குறளில் உள்ள 1329 குறள்களும் என்னென்ன செல்வங்களைத் தரும்? என்பதை எண்ணிப் பாருங்கள். எண்ணிப் பார்த்ததும், குறளினை எடுத்து ஊடுருவிப் படித்து, அவற்றிலுள்ள புதை பொருள்களையெல்லாம் அறிந்து, பிறருக்கும் வாரி வழங்கிச் சிறப்பெய்தி வாழுங்கள்.

வளரட்டும் சால்பு!