பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோலொடு நின்றான்!

21


வேலொடு நிற்பவன் வாழும் காடும், கோலொடு நிற்பவன் வாழும் நாடும், பொருளொடு நிற்பவன் வாழத் தகுதியற்றவை என்பது இக் குறளின் முடிவு.

வேலொடு நிற்பவன் கொடுமை ஒருபொழுது மட்டுமே துன்பம் தரும்; கோலொடு நிற்பவன் கொடுமையோ எப்பொழுதும் துன்பம் தரும். ஆதலின் கோலின் கொடுமைக்கு வேலின் வெம்மை ஏற்ற உவமையாக இல்லை என வள்ளுவர் உள்ளம் வருந்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த உவமை பொருந்தாமையாலும், இதனினும் சிறந்த உவமை கிடைக்காமையாலுமே வள்ளுவர் இக் குறளில் 'என்றது போலும்' என ஐயப்பாட்டுடன் கூறியுள்ளார். இன்றேல் அவர், 'என்றது போல' எனக் கூறியிருக்கக்கூடும்.

உயிர்க்கு உடலாகவும், உடலுக்கு உயிராகவும் புவி மன்னர்களைக் கூறுவது கவி மன்னரது வழக்கு. ஆதலின், உடலை வருத்தும் வேலும் உயிரை வருத்தும் கோலும் இக் குறளில் குடி கொண்டிருக்கின்றன போலும்.

கோலைப் பிடிக்கவேண்டிய மன்னன் தன் பண்பை அடியோடு இழந்துவிட்டு, வேலைப் பிடிக்கின்ற வேடனின் பண்பைப் பெற்றிருக்கிறான். அவ்வாறிருந்தாலும், அவன் மன்னனும் அல்ல, மறவனுமல்ல, மனிதனும் அல்ல என்பதை இக் குறளாலும் நன்கு அறியலாம்.

முறைசெய்யும் மன்னவன், கொலை செய்யும் வேடனின் குணத்தைப் பெற்றுவிடுவானானால், கொடியோரைத் தேடித் தண்டித்து நல்லோரைக் காக்கும் நற்றொழிலைச் செய்ய அவன் விரும்பமாட்டான் என்ற கருத்தும் இக் குறளில் மறைந்து காணப்படுகிறது.

ஈகைத் தொழிலுக்குரிய மன்னன் இரத்தல் தொழிலிற் புகுந்து மக்களிடம் விரும்பிக் கேட்டுப் பெறுகின்ற பொருளே வழிப்பறிக் கொள்ளை என்றாகுமானால், கொடாவிடில் துன்புறுத்துவேன் என அச்சுறுத்திப் பெறும் பொருளை எதனொடு ஒப்பிடுவது? என்பதை எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது இக் குறள்!