22
திருக்குறள் புதைபொருள்
கோலொடு நிற்கும் அரசர்கள் இன்று இல்லை எனினும் கொடுமையோடு நிற்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இன்று உள்ளனர். அவர்கள் கோலொடும் வேலொடும் கொடுமையொடும் நில்லாமல் குறளொடு நிற்கவேண்டும் என்பது நமது விருப்பம்.
இவ் ஒரு குறள் இவ்வளவு பொருள்களைத் தருமானால் பிற குறள்கள் என்னென்ன தரும்? என்று எண்ணிப்பாருங்கள். எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! சிந்தியுங்கள் ஆழ்ந்து! அவ்வளவோடு நின்றுவிடாதீர்கள்! செய்கையிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.
வாழட்டும் தமிழகம்!
4. சேர்ந்தாரைக் கொல்லி
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
சினம் என்பது மக்களுக்கு வேண்டாதவைகளில் ஒன்று என்று இக் குறள் கூறுகிறது.
'சினம், சுடும்' என்ற சொற்கள் முதலும் முடிவுமாகக் கொண்டு நின்று சினத்தின் பண்பையும் குறளின் நயத்தையும் விளக்கிக்கொண்டிருக்கின்றன.
தீ சுடும் என்று நாம் பிள்ளைகளை எச்சரிப்பதுபோல, சினம் சுடும் என்று வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.
கோபம் கொண்டவனுடைய குருதி, நரம்பு, நெஞ்சு, மூச்சு அனைத்தும் கொதிக்கும் என்பதை அறிந்தே ஆசிரியர் 'சுடும்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
சினம் 'சுடும்' என்று கூறி, அதனை நெருப்பாகக் காட்டி, அதற்குச் சேர்ந்தாரைச் கொல்லி என்று ஒரு பெயரையும் இட்டு, அப் பெயராலேயே அதன் இழி