பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

திருக்குறள் புதைபொருள்

களைக்கொண்ட இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது என்பது இதன் விளக்கமாகும்.

தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கிற, இனித் தோன்றவிருக்கிற எழுத்துக்கள் எல்லாம் 'அ' எழுத்தையே முதலாக உடையன என்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பெருமான் ஆராய்ந்து கூறியிருப்பது வியப்பிற்குரியதாகும்.

எழுத்துக்கள் மட்டுமின்றி சொற்களும்கூட அகரத்தையே முதலாக உடையனவாம். மக்கள் முதன்முதலில் வாயைத் திறந்தபோதே 'அ' ஒலித்துவிட்டது. பின் திறந்த வாயை மெல்ல மூடித் திறந்தால் "அம்மா" என்றும், அழுத்தமாக மூடித்திறந்தால் "அப்பா" என்றும் ஒலிக்கிறது. மக்கள் இவ்வுலகில் முதன்முதலிற் கண்ட தாய் தந்தையர்க்கு முதன் முதலில் ஒலிக்கிற சொற்களையே பெயராக வைத்திருப்பதும், அதிலும் மெல்லோசையை மென்மையையுடைய தாய்க்கும், வல்லோசையை வன்மையையுடைய தந்தைக்கும் வைத்து அழைப்பதும், ஆடு மாடுகளுங்கூட அலறும்பொழுது 'அம்மா' என்ற சொல்லே வெளி வருவதும், அச் சொல்லே எல்லாச் சொற்களுக்கும் முதன்மையாக அமைந்திருப்பதும் கருதத்தக்கன! தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகின் பலவிடங்களிலுமுள்ள பல மொழி பேசும் மக்களும் தங்களின் தாய் தந்தையரை 'அம்மா!' 'அப்பா!' என்றே அழைத்து வருவதையும், அதிலும் 'அ' எழுத்தே முதலில் அமைந்திருப்பதையும் காணும் பொழுது அகர முதல சொல்லெல்லாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

வடிவிலும்கூட அகரம் முன்நிற்கிறது. 'சர்வம் பிரணவ மயம் ஜகத்' என்று வேதாந்தங்களின் கருத்து. பிரணவம் என்பது ஓங்காரம் என வடநூலார் கூறுவர். தமிழிலோ வடமொழியிலோ, ஓங்காரம் முதல் எழுத்தாக இல்லை . உற்று நோக்கினால் 'அ' என்ற முதல் எழுத்தே ஓங்கார வடிவமாகத் தோன்றும்,