பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகர முதல எழுத்தெல்லாம்

39


‘அ’ எழுத்தை முக்காற் பங்கு எழுதுங்கள். இன்னும் எழுதவேண்டிய காற்பங்கு போன்று மீதியாக இருக்கும் அதை அப்படியே செங்குத்தாக மேல் நோக்கிப் போட்டு விடுங்கள். அவ்வளவுதான். ஓங்கார வடிவைத் தலை கீழாகக் காண்பீர்கள். அதைக் காணும்பொழுது அகரமுதல வடிவெல்லாம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

வடிவு மட்டுமல்ல; ஒலியுங்கூட அவ்விதமே. பிரணவத்தின் ஒலி ‘ஓம்’ என்பது. இதை ஒலிப்பதனால் ‘அ’ என்று வாயைத் திறந்து, ‘உ’ என்று குவித்து, ‘ம்’ என்று மூடியாக வேண்டும். இதிலிருந்து ‘ஓம்’ என்பதை ஒலிக்க, அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களும் அவற்றின் ஒலிகளும் தேவை என்பது தெளிவாகும். அதை அறிந்தே சிவவாக்கியர் என்ற சித்தர் ஒருவர்-

        அகார காரணத்துளே அடங்கி நின்ற வையகம்
        உகார காரணத்துளே ஒடுங்கி நின்ற வையகம்
        மகார காரணத்துளே மயங்கி நின்ற வையகம்

என்று கூறினர் போலும். ‘ஓம்’ என்பதை ஒலிக்கும் இந்த அ, உ, ம் என்ற எழுத்துக்கள் மூன்றையும், ‘அ’ தன்னுள் அடக்கி நிற்பதைக் காணலாம், காணுங்கள்!

‘அ’ எழுத்தைச் சரிபாதியாக வெட்டுங்கள். மேற்பாதி வ ஆகவும், கீழ்ப்பாதி அதாவது ம தலைகீழாகவும் காணப்படும். மேல்பாதி வ-வை வலது கோடியில் வெட்டினால் உ என்றும் 1 என்றும் காணப்படும். இம்மூன்றும் அ, உ, ம என்றாகி ‘ஓம்’ என்ற ஒலியை ஒலிப்பதைக் கண்டு மகிழுங்கள். இதைக் காணும்பொழுது அகர முதல ஒலி எல்லாம் என்று கருத வேண்டியிருக்கிறது.

குறளில் உள்ள ‘எல்லாம்’ என்ற ஒரு சொல் ‘எழுத்தெல்லாம்’ என்பதில் எழுத்துடன் சேர்ந்தும், பிறகு தனித்தும் நின்று, சொல்லெல்லாம், வடிவெல்லாம், ஒலியெல்லாம் என்பவைகளையும் தன்னுள் அடக்கி, எல்லாம் என்று நிற்பதைக் காணும்பொழுது நமது உள்ளமெல்லாம் மகிழ்கிறது.