மதிப்புரை
டாக்டர் திரு. அ. சிதம்பரநாத செட்டியார்
அவர்கள், எம். ஏ., பி எச். டி.
தமிழ்ப் பெரும் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்
திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். அதன் நுண்பொருள்களை ஆய்ந்து பிறர்க்கு எடுத்து வழங்கும் நாநலம் படைத்தவர். "எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு" என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அறிவு நிரம்பியவர்.
அவரால் இயற்றப்பட்ட இந்நூல், புலவர்க்கும் பொது மக்கட்கும் இனியதோர் விருந்தாகும். திருக்குறட்பாக்களில் வரும் சொற்களை அலசியலசி ஆராய்ச்சி செய்து, கடைந்தெடுத்த நுண்பொருள்களை இனிய, எளிய, செந்தமிழ் நடையில் இந்நூலினுள் அவர் தந்திருப்பதை வரவேற்கின்றேன். "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள்" என்றதன் உண்மையானது, இச் சிறிய பெருநூலால் நன்கு விளங்குகிறது.
'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்ற இடத்தில் வரும் "உயிரினும்" என்ற சொல்லுக்கும், 'பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு' என்ற இடத்து வரும் "பிறர்"