பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10



‘ஒரு பெருஞ்செல்வம் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு, வள்ளுவர், ‘நாடகக் கொட்டகைகளில் மக்கள் திரண்டு வந்திருப்பது போல’ என்று விடை கூறியிருப்பது பெரிதும் வியக்கக்கூடியதாகும்.

எங்கெங்கோ மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருக்க அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நடப்பதைக் கண்டு மகிழக் கூடியிருக்கும் கலைஞர்களின் கூட்டத்தை மட்டும் பெருஞ்செல்வத்திற்கு உவமையாகக் காட்டியிருப்பது அவரது கலையுள்ளத்தையே நமக்குக் காட்டுவதாக இருக்கிறது.

எப்படி நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து பின் பெருங்கூட்டமாகக் காணப்படுகிறார்களோ, அப்படியே ஒருவனுக்குச் செல்வமும் சிறிது சிறிதாக வந்து, பின் பெருஞ்செல்வமாகத் திரண்டு காட்சியளிக்கும் என்ற கருத்தையும் இக்குறளிற் கண்டு மகிழுங்கள்.

நாடகத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்த மக்கள், நாடகம் முடிந்தபிறகு ஒன்று சேர்ந்து ஒரேயடியாய்ப் போய்விடுவதைப் போல, வருங்காலத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய்ப் போய்விடும் என்ற உண்மையை, இக்குறள் வெகு அருமையாக விளக்கிக்கொண்டிருக்கிறது.

நாடகக் கொட்டகைக்கு மக்கள் வரும்போது, ஒரு வழியில் மட்டும் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடுவதுபோல, செல்வமும் ஒரு வழியில் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடும் என்ற கருத்தை இக்குறள் மிகவும் அழுத்தமாகவே கூறிக் கொண்டிருக்கிறது.