பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

எனவும் வரும் பாடல்களில் தாயுமான அடிகளார் அறிவுறுத்திய திறம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

மாரிமுத்து புலவர்: தில்லையை அடுத்த தில்லைவிடங்கன் எனனும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றியவர்; முத்தமிழிலும் நிரம்பிய புலமை படைத்தவர்; தில்லைக் கூத்தப் பெருமான்பால் அளவிலாப்பேரன்பு உடையவர். தம்பிள்ளைகள் மூவரில் ஒருவருக்குச் சித்தப்பிரமை உண்டாகிய நிலையில், புலியூர் வெண்பா என்னும் பனுவலால் கூத்தப் பெருமானைப் போற்றி அந்நோயை நீக்கினார். சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது, புலியூர் நொண்டி நாடகம் என்பனவும் இவர் இயற்றியனவே.

முத்துத்தாண்டவர்: சீர்காழியில் இசை வேளாளர் மரபில் பிறந்த இவர், வயிற்றுவலியால் பெரிதும் வருத்தமுற்றார். சீர்காழித் திருக்கோயிலில் தோணியப்பரை வழிபட்டு இவர் அன்றிரவு அக்கோயிலிலேயே உண்ணாது, பசியால் வருந்தி உறங்கி விட்டார். அந்நிலையில் திருநிலை நாயகியாகிய அம்மையார் இவர் முன் தோன்றி. பாலடிசில் அளித்து உண்ணச்செய்தார். "நீ தில்லைப் பெருமானைத் தரிசித்து வணங்கிப் பாடுவாயாக. அதுவே உனது உடற்பிணியை நீக்கும் மருந்தாகும்". என அம்மையார் அறிவுறுத்தி மறைந்தருளினார். அம்மை அருளிய வண்ணம் தில்லைப் பதியை அடைந்து கூத்தப்பெருமான் திருமுன் நின்ற இவர் 'பூலோக கைலாசகிரி சிதம்பரம்' என ஆங்கெழுந்த சொற்றொடரினையே முதலாகக் கொண்டு இனிய கீர்த்தனைகளைப் பாடித் துதித்தார். கூத்தப் பெருமானருளால் பஞ்சாக்கரப்படிகளிலிருந்து ஐந்து பொற்காசுகளைப் பெற்றுப் பிணி நீங்கி மகிழ்ந்தார். ஒருமுறை தில்லைக்கு வந்த பொழுது இவரைப் பாம்பு தீண்டியது. 'அருமருந்து ஒரு தனி மருந்து அம்பலத்திற் கண்டேனே' என்னும் கீர்த்தனையைப் பாடி விடம் நீங்கப் பெற்றார். தில்லைப் பெருமான் மீது கீர்த்தனங்கள், பதங்கள் பலவும் பாடிய இவர், ஆவணிப் பூச நாளில் கூத்தப்பெருமான் திருமுன் நின்று 'மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தர வல்லாயோ' என்னும் இசைப் பாடலைப்பாடிப் பிறவா நெறியாகிய முத்தியின்பத்தைப் பெற்றார்.