பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

சிவனைத் தொழுகுலமாகப் பெற்று அம்முதல்வனது ஊர்தியாகிய இடபத்தினை இலச்சினையாகக் கொண்டவர்கள் பல்லவ மன்னர்கள். அத்தகைய பல்லவமரபிலே தோன்றிய நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சைவ வைணவ சமயங்களிற் சமநோக்குடையனாக விளங்கினான். இவன் தன்காலத்தில் திருமாலின் திருவருளுக்குரிய அருளாசிரியராகத் திகழ்ந்த திருமங்கையாழ்வாரது தொடர்பினால் பரமவைணவனாக மாறி விட்டான். "முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை” எனத்தண்டத்தோட்டப் பட்டயம் இம்மன்னனைப் பற்றிக் கூறுதலால் இவன் வைணவனாக மாறிய செய்தி நன்கு புலனாகும். இவன் பரம வைணவனாக மாறிய பின்பே தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயில் முற்றத்திற் கோவிந்தராசப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனன் என்று தெரிகிறது.

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்ற கோவிந்தராசப் பெருமாளை முறைப்படி பூசை செய்து வந்தவர்கள் தில்லை மூவாயிரர் எனச் சிறப்பித்துரைக்கப்படும் தில்லைவாழந்தணர்களேயாவர். இங்குள்ள பெருமாள் திருவுருவம் நடராசர்கோயிலைச் சார்ந்த சுற்றுக்கோயில் தெய்வம் (பரிவாரதெய்வம்) என்ற அளவிலேயே தில்லைவாழந்தணர்களால் முறைப்படி பூசனை செய்யப்பெற்று வந்தது. இவ்வாறே காஞ்சிநகரில் ஏகாம்பரநாதர் திருக்கோயிவில் பரிவார தெய்வமாக எழுந்தருளியுள்ள பெருமாளை "நிலாத்திங்கள் துண்டத்தான்” எனத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருப்பதும் இங்கு எழுந்தருளிய பெருமாளைப் பூசனை செய்யும் உரிமையினை இக்கோயிற் பூசை முறையினராகிய ஆதி சைவக் குருக்கள் இன்றளவும் மேற்கொண்டிருப்பதும் இங்கு நினைத்தற்குரியதாகும். தில்லைக் கோவிந்தராசப்பெருமாள் பிரதிஷ்டை பற்றியும் ஆதியிலிருந்த பூசை முறைபற்றியும் ஆராய்ச்சியறிஞர் மு. இராகவையங்கார் அவர்கள் 'திருச்சித்திரகூடம்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையில் பின் வருமாறு கூறியுள்ளார்:

திருமங்கை மன்னன்