பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

"மாயை தனையுதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான் எடுத்து-நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்" (உண்மைவிளக்கம் 36)

எனவரும் பாடலில் திருவதிகை மனவாசகங் கடந்தார் விளக்கி யுள்ளமை அறியத்தகுவதாகும். மோனம் என்னும் ஞானவரம்பில் நின்ற பெருமக்களின் மும்மலப்பிணிப்புக்களையும் அறவே நீக்கித் தான் என்னும் ஆன்மபோதம் அழிந்த இடத்திலேயுளதாகும் சிவானந்தத் தேனை முகந்து கொண்டு மன்னுயிர்கள் பருகி மகிழச் செய்தலே அருளே திருமேனியாகக் கொண்ட, தில்லையம்பலவாணர் நிகழ்த்தியருளும் ஆனந்தத்திருக்கூத்தின் பயனாகும் என்பதனை அறிவுறுத்துவது,

“மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும்-ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு வம்பலத்தான் கூத்து"

எனவரும் உண்மை விளக்க வெண்பாவாகும்.

தில்லை வாழந்தணர் மரபில் தோன்றிய சைவ சமய சந்தான குரவருள் மூன்றாமவராகிய மறைஞான சம்பந்தரால் ஆட் கொள்ளப்பெற்றவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். சந்தான குரவருள் நாலாமவராகப் போற்றப் பெறும் இவர், கோயிற் புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலிய இலக்கியங்களையும், சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள - சித்தாந்த சாத்திரங்களெட்டையும் இயற்றியவர்: வடமொழியில் இவரியற்றிய பல நூல்களுள் பவுஷ்கர ஆகமத்திற்கு எழுதிய பேருரை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். தில்லைக்குக் கிழக்கேயுள்ள கொற்றவன் குடியில் தங்கியிருந்து மாணவர் பலர்க்கும் தீக்கை செய்து சிவநெறியைப் பரப்பியவர்; தில்லை அம்பலவாணர் பெத்தான் சாம்பான் பொருட்டுப் பாடிக் கொடுத்த