பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

51



இவ்வுதாரணத்தின்கண் சுட்டெழுத்தும் சுட்டப்படும் பொருளும் அக்கொற்றன் என்றவிடத்துப் போல வேறு நில்லாது ஒருபெயர்ப்பட்டு நிற்றலான் அ, இ, உ முதலிய எழுத்துக்கள் இதன் முதற்கண் மலையன் என்பதன்கட் பகுதி போல பிளவுபட்டுத் தனியே நின்றன எனக் கொள்ளல் பொருந்தாது. ஆசிரியர் தொல்காப்பியனார் சுட்டு என்ற பெயரினை அ, இ, உ என்ற எழுத்துக்களுக்கே இட்டு வழங்கினார். அவையடியாகப் பிறந்த பெயர்களைச் சுட்டுப் பெயர் (சொல்கிளவி சூ, 37, 38) எனக் குறிப்பிட்டு வழங்குவர்,

அவன், இவன், உவன், அவள், இவள், உவள்,
அவர், இவர், உவர், அது, இது, உது,
அஃது, இஃது, உஃது, அவை, இவை, உவை,
அவ், இவ், உவ்

என்றாங்குப் பல திறப்படுத்துப் பெயரியலுள் (சூ, 8, 13) வழங்கியுள்ளார். அ, இ, உ, என்பனவற்றைக் குறிக்கும்போது சுட்டு என்ற சொல்லை வழங்கியும், அது, அவ் முதலியவற்றைக் குறிக்கும்போது சுட்டுமுதலுகரம் சுட்டு முதலாகிய வகரவிறுதி என்று கூறிச் சுட்டடியாகப் பிறந்ததெனக் குறிப்பிட்டும்’ செல்லுதல் நோக்கத்தக்கது.

ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா. (தொல். 32)

இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.

(இ-ள்) ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் வினா என்னும் பெயரினையுடைய எ-று.

வினாப்பொருளுணர்த்தலின் வினாவாயிற்று. உண்கா உண்கே, உண்கோ என வரும். ஆசிரியர் ஈண்டு ஆ, ஏ, ஓ, என எழுத்தாம் நிலையில் நின்று வினாப்பொருள் உணர்த்திவரும் மூன்றனையும் வினாவெனக் குறியிட்டுரைத்தார். சொல்லாம் நிலைமையில் நின்று யாவன், யாவள், யாவர், என உயிர்தினைக் கண்ணும், யாது, யா, யாவை, என அஃறிணைக்கண்ணும் பெயராகவும், உயர்திணைக்கண் யார் எனவும் அஃறிணைக்கண் எவன் எனவும் வினா வினைக்குறிப்பாகவும் வருவனவற்றை முறையே சொல்லதிகாரத்துப் பெயரியல் வினையியல் இவற்றிற் கூறிப் போந்தார். எவ்வயின் எதோளி என எகர முதலாக வயின் என்பதும் இகரவிகுதியும் ஒட்டி யொருசொல்நீர்மைப்பட்டு இடப்பொருளுணர்த்தி இங்ஙனம் வினாவாய் நிற்கும் இடைச்