பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தொல்காப்பியம்-நன்னூல்



ஆய்தம் தோன்றுமாறு:- லகர, ளகர வீற்றுச் சொற்கள் அல்வழிக்கண் தகரமுதன்மொழி வருமிடத்து ஆய்தமாகத் திரிந்து முடியும் (369, 399) எனவும், வகரவீற்றுச் சுட்டுப்பெயர் அவ்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ் வகரமெய் ஆய்தமாகத் திரிந்து முடியும் (379) எனவும் புள்ளி மயங்கியலிற் கூறுகின்றார். அவ்வாறு ல, ள, வீற்று மொழிகள் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழியோடு புணர்தலியன்ற நிலைமைக்கண் நிலைமொழியீற்றிலுள்ள அம் மெய்கள் ஆய்தமாகத் திரிந்து முடிதலான், ஆய்தந்தோன்று மென்னாது வேறோரெழுத்தின் ஒசைக்கண் ஆய்தவொலி திரிந்து தோன்றுமென்பது பட இசைமை தோன்றும்” என்றார்.

  (உ-ம்) கஃறீது, முஃடீது, அஃகடிய எனவரும்.

உருவினு மிசையினு மருகித் தோன்று
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா
ஆய்த மஃகாக் காலை யாள. (தொல். 40)

  இஃது ஒருமொழி யாய்தத்திற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது.
  “ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும் ஒசையின் கண்ணும் சிறுபான்மையாய்த் தோன்றும் குறிப்பு மொழிகளெல்லாம் ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா; அவ்வாய்தம் தன் அரைமாத்திரையளவாய்ச் சுருங்கி நில்லாது நீண்டகாலத்து அந்நீட்சிக்கு” எனப் பொருள் கூறிக் கஃறென்றது என்பது உருவு, சுஃறென்றது என்பது இசை’ இளம்பூரணர் உதாரணங் காட்டினர்.
  நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மறுத்து இஃது எதிரது போற்றலென்னும் உத்தியால் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கண முணர்த்துகின்றது எனக் கருத்துரைத்து, நிறத்தின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறு பான்மை ஆய்தந்தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும் அவை யொழிந்த எல்லா மொழிகளும் ஒற்றெழுத்துக்கள் போல அரை மாத்திரையின் கண்ணும் சிறுபான்மைமிக்கும் நடந்து ஆய்தம் சுருங்காத இடத்தான சொற்களாம் எனப் பொருள் கூறி, “கண்ண் டண்ணெனக் கண்டுங் கேட்டும் என ஒற்றளபெழுப்புழிக் கண்ண் என்பது சீர்நிலையெய்தினாற்போல “கஃஃறென்னுங் கல்லரத்தம்” என நிறத்தின் கண்ணும் “சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணையென இசையின் கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரைபெற்றுச் சீர்