புலவர் என்.வி. கலைமணி
47
எவ்வாறு புரிந்து வைத்திருந்தாரோ, அதுபோலவே நாயுடு அவர்களும் தனது யு.எம்.எஸ். மோட்டார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவு ஊழியர்களையும் நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களது திறமைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டார். இதற்கு ஓர் எடுத்துக் காட்டு இது.
யு.எம்.எஸ். நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 64 பேர்கள் விடுமுறை எடுத்திருந்தார்கள். எவரும் வேலைக்கு வரவில்லை. அந்தப் பட்டியலை நாயுடு அவர்கள் பார்த்ததில், 43 தொழிலாளர்கள் எந்த விதக் காரணமும் கூறாமல், நிறுவன அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டார்கள் என்பதை அவர் அறிந்தார்.
அந்தப் பட்டியலில், 223 தொழிலாளர்கள் பணிபுரிவதற்கு வரவேண்டிய குறிப்பிட்ட நேரம் கழித்துத் தாமதமாக வேலைக்கு வந்ததையும் உணர்ந்தார்.
திரு. நாயுடு அவர்கள்; செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்பும் கருத்துடையவர். ஒழுங்கீனங்கள் வேலையில் நுழைவதை அவர் அறவே வெறுப்பவர். அதுமட்டுமன்று - காலம் பொன்னானது; கடமை உயிர் போன்றது என்ற எண்ணம் கொண்டவர். தாமதமாக வருபவர்களைத் திருத்த வழி என்ன என்று சிந்தித்தார் அவர்.
அந்தத் தொழில் நிறுவனத்தில், பணியாற்றிடும் ஒவ்வொரு பிரிவு ஊழியர்களின் வருகைப் பட்டியலைத் தினந்தோறும் தனது மேசைக்கு அனுப்புமாறு திரு. நாயுடு கட்டளையிட்டார். அது முதல் பணியாளர்கள் ஒழுங்காக, தவறாமல், குறித்த நேரத்தில் பணி மனைக்கு வரலானார்கள்.
தவறாக நடப்பவர்கள் பெயரைக் குறித்து அந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பித் தண்டனையும் தரச் செய்தார் நாயுடு. இதனால், தொழிலில் ஒழுங்கீனம் ஒழிந்தது. பணியாளர்களும் பணி முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்தார்கள்.
இதுபோன்ற கட்டளையைப் பிறப்பித்த திரு. நாயுடு அவர்கள், ஆறு மாதம் கழித்து, மீண்டும் தொழிலாளர்கள் வருகைப் பட்டியலை வர வழைத்துப் பார்த்தார்.