பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214



உடனே மனைவி, இக்ரிமாவைத் தேடிச் சென்று, அவரைக் கண்டு: “மிகுந்த தயாளமும், மேன்மையும் மிக்க ஒருவரிடமிருந்து நான் உம்மிடம் வந்திருக்கிறேன். ஆகையால், உம்மையே நாசமாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பெருமானார் அவர்களிடமிருந்து நான் மன்னிப்புப் பெற்று வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

உடனே இக்ரிமா இஸ்லாத்தைத் தழுவினார்; தம் மனைவியோடு மக்காவுக்கு வந்து பெருமானார் அவர்கள் இருக்கும் இடம் சென்றார்.

இக்ரிமா, இஸ்லாத்துக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவருடைய தந்தையான அபுஜஹிலோ, இஸ்லாத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர். அத்தகைய கொடிய பகைவரான இக்ரிமா இஸ்லாத்தைத் தழுவியது பெருமானார் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.


162. குற்றத்தை உணர்ந்து மன்றாடுதல்

முன் ஒரு சமயம், பெருமானார் அவர்களின் மகள் ஸைனப் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் செல்வதற்காக ஒட்டகத்தின் மீது ஏறிய போது, அல் ஹுவைரிது, ஹப்பார் என்ற இருவர் ஈட்டியின் பின்புறத்தால், அவர்களைத் தாக்கினர். அதனால், அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே விழும்படியாயிற்று. அப்பொழுது அவர்கள் கருக் கொண்டிருந்ததால், அக்கரு சிதைந்தது. இறுதியில் அவர்களின் மரணத்துக்கும், அதுவே காரணமாகவும் அமைந்தது.

அக்கொடிய குற்றத்தை நினைத்துப் பயந்த ஹப்பார், வேற்று நாட்டுக்கு ஓடிவிட்டார். சில நாட்களுக்குப் பின்னர், பெருமானார் அவர்களின் முன்னே வந்து, "இறை தூதரே! நான் செய்த குற்றங்களையும், உங்களுக்குச் செய்த கொடுமைகளையும் எண்ணி, அஞ்சி, அயல்நாட்டுக்கு ஓடினேன். ஆனால், தங்களுடைய கருணையும், தயாள சிந்தையும், பகைவர்களை மன்னிக்கும் பான்மையும் என் நினைவுக்கு வந்து, திரும்பியுள்ளேன். நான் குற்றம் புரிந்தவன்தான். எனினும், என்னை மன்னித்து விடுமாறு மன்றாடுகிறேன்” என்றார்.