பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48



புரியும்படியும் கட்டளையிட்டார்கள். இவையே எங்கள் பெருமானார் அவர்களின் அறிவுரைகள்!

“அவர்களை மதித்து, அவர்களிடம் விசுவாசம் கொண்டு அவர்களுடைய அறிவுரைகளை நாங்கள் கடைப்பிடித்தோம். இவற்றின் காரணமாக, எங்கள் நகரத்துச் சமூகத்தினர் எங்களைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல; இழைத்த துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் அளவே இல்லை. அதனால், நாங்கள் வீடு வாசல்களைத் துறந்து, மனைவி மக்களைப் பிரிந்து, பொருள்களையும் இழந்து, நிர்க்கதியான-நிராதவரான நிலையில், உங்களுடைய பரந்த மனப்பான்மையையும், உயர்வான போக்கையும் அறிந்து, உங்கள் நாட்டில் அடைக்கலம் ஆனோம்.

ஆகையால், மேன்மைக் குணம் உடைய தாங்கள், எங்களுக்கு ஆதரவு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறினார்.

ஜஃபர் கூறிய அவ்வுரைகள் அரசனின் உள்ளத்தை நெகிழச் செய்தது. மேலும், அரபு நாட்டில் தோன்றிய நபி பெருமானார் அவர்களின் அறிவுரைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவருக்கு உண்டாயிற்று.

அரசர், ஜஃபரிடம், “உங்களுடைய நபி அவர்களுக்கு வெளியான வேதத்திலிருந்து சில பகுதிகளைக் கூறும்” என்று கேட்டார்.

திருக்குர் ஆனில், ஹலரத் ஈஸா அலைஹிஸ்லலாம் அவர்களின் பிறப்பைப் பற்றிய “ஸூரத்து மர்யம்” என்ற அதிகாரத்தின் ஆரம்ப வாக்கியங்களை எடுத்து ஓதினார் ஜஃபர்.

சொற்களின் கம்பீரமும், அவற்றின் உண்மையான கருத்துகளும், மொழியின் அழகும், கருத்துச் செறிவும் அரசரின் உள்ளத்தை ஈர்த்தது.

உடனே அரசர்,"கடவுள் மீது சத்தியமாக இம்மொழியும், இன்ஜீலும் (ஈஸா நபி அவர்களுக்கு வெளியான வேதமும்) ஒரே தீபத்திலிருந்து வெளியான ஒளிகளே!” என உரக்கக் கூறினார்.

குறைஷித் தூதர்களிடம் முஸ்லிம்களை ஒப்படைக்க மறுத்து விட்டார் அரசர்.