ஆட்சி நாகை 83
தஞ்சையில் ஒரு கிளைக் குடியை உருவாக்கினார். அது தஞ்சை நாயக்கர் குடி என்று பெயர் பெற்றது. 1540-இல் ஆட்சிபெற்ற சேவப்ப நாயக்கர் நாற்பது ஆண்டுகள் தஞ்சையிலிருந்து ஆண்டார். அவர்தம் ஆட்சிக்காலத்தில் அவர் நாகைக்கு வருகை தந்துள்ளார். கோயில் திருப்பணிகள் செய்துள்ளார். அவர் புத்தப் பள்ளிகளுக்கும் முகமதியர் மசூதிகளுக்கும் சமயப் பொதுப்பாங்கில் பல அறக்கொடைகள் செய்தவர். அவர் காலத்தும் நாகையில் புத்தப் பள்ளிகள் இருந்தன. எனவே, அவர் அறக்கொடையை நாகை புத்தப் பள்ளியும் பெற்றது. ஆனால் நாகையிலோ நாகூரிலோ அவர்தம் அறக்கொடையை மசூதி பெற்றதன்று. அப்போது நாகூர் தர்கா அமையவில்லை. தர்காவில் அடக்கமான முகமதியத் துறவியார் அசரத் காதறு ஒலி அவர்கள் 1572 - இல் அடக்கமானார். இதற்கு ஏறத்தாழ 30 ஆண்டுகளின் முன்னர் சேவப்ப நாயக்கர் ஆண்டார்.
அவரைத் தொடர்ந்து தஞ்சை நாயக்க அரசுக் குடியினராகச் சிலரும், பின்னர் -
அச்சுதப்ப நாயக்கர் ... 1580 - 1600, இரகுநாத நாயக்கர் ... 1600 - 1534,
விசயராகவ நாயககர் ... 1634 - 1673 ஆண்டனர். பின்னர் திருச்சி சொக்கநாத நாயக்கரால் தஞ்சை மன்னராக ஆக்கப்பெற்ற அவர் தம்பி அழகிரி நாயக்கர் (1673 - 1674) என்பார் தஞ்சையை ஆண்டார். இவ்வழகிரி நாயக்கர் மீது பீசப்பூர் சுல்தான் தன் படைத் தலைவரான மராத்திய ஏகோசியை அனுப்பிப் போரிடச் செய்தார். ஏகோசி அழகிரியை அய்யம்பேட்டையில் தோற்கடித்தார். ஏகோசி தம் பொறுப்பில் செங்கமலதாசர் என்பவரைத் தஞ்சை மன்னராக்கினார். தஞ்சையில் நாயக்க மன்னராட்சி முடிவுற்றது. 6. மராத்தியர் தஞ்சை (1675 - 1855)
மராத்தியப் படைத்தலைவராக வந்த ஏகோசி 1675 -இல் தஞ்சையில் மராத்திய மன்னராக ஆட்சி கொண்டார். இவர் முதல்வராக மராத்திய இனத்தவர் ஆட்சி சோழநாட்டில் துவங்கியது. நாயக்கர் தெலுங்கு நாட்டவர் என்று கண்டோம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். வடமொழிப் பற்றாளர். தமிழும் தெலுங்கும் சோழநாட்டு ஆட்சி மொழிகளாக அமைந்தன. நாயக்க மன்னராட்சியாகத் தஞ்சையும் நாகையை உள்ளிட்ட அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் 144 ஆண்டுகள் இருந்தன.