வேதரிஷிகளின் கவிதை
அதிதி-பராசக்தி
பூ சி. சுப்பிரமணிய பாரதி
2 ஆகஸ்டு 19 1 6
(குறிப்பு :-அதிதி என்ற சொல்லை உச்சரிக்கும்போது முதற் ‘தி'கரத்தை ‘உந்தி’ என்பதுபோல் மெல்லோசையாகச் செல்லுக. இரண்டாவது ‘தி’கரத்தை ‘திங்கள்’ என்பதுபோல் வல்லோசையாக்க வேண்டும்.)
மாக்ஸ்முல்லர் (Max Muller) எழுதுகிறார்:"உண்மையில் ‘அதிதி’ என்ற தெய்வப் பெயரே ‘அநந்தம்’ அல்லது எல்லையில்லாமை என்ற கருத்தைக் குறிப்பிடுவதற்கு மனித பாஷைகளில் உண்டான பதங்கள் எல்லாவற்றிலும் முந்தியது. ‘திதி’ என்றால் கட்டுப்பட்டது,பிரிவுபட்டது, எல்லையுடையது என்று அர்த்தம்.
‘அதிதி’ கட்டுப்படாதது, பிரிவுபடாதது, எல்லையில்லாதது.”
இந்த அதிதி என்ற அநந்த சக்தி தேவர்களுக்கெல்லாம் தாய். எல்லாப் பொருள்களும், எல்லா உலகங்களும் இதனிடத்திலே தோன்றின. அஞ்ஞானக் கட்டுகளிலிருந்து விடுதலை பெற விரும்புவோன் அதிதியையே துணையாகக் கொள்ளவேண்டுமென்று வேதம் சொல்லுகிறது.