பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

முதற் குலோத்துங்க சோழன்

சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே கொங்கணர் கொங்கர் குலிங்கர் அவந்தியர் குச்சரர் கச்சியரே வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்தர் திகத்நர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே.'

என்ற மன்னர்கள் அம்மன்னனை யணுகிப் பணிந் தெழுந்து மன்னர் மன்ன ! அடியேம் நினக்கு இறுக்கக்கடவதாய இறைப்பொருள் கொணர்ந்துளேம்' என்றுரைத்துத் தாம் கொண்டுவந்துள்ள பொற்கலம் மணித் திரள் முதலான பொருள்கள் அனைத்தையும் அரசன் திருமுன்னர்க் காட்டிக் கைகுவித்து ஒருபுடை நின்றனர்.

அப்போது அரசன் 'இவர்களொழியத் திறை கொடாதார் இன்னும் உளரோ' என்று வினவினான். அச்சமயத்துக் கடகர் முன்றோன்றி, 'பெருமானே, எங்கள் திறையும் கொண்டுவந்துவிட்டோம்' என்றுரைத்து அவன் கழல் வணங்கினர். அப்போது, 'வட கலிங்கத்தரசன் இருமுறை திறை கொணர்கிலன்' என்று அமைச்சன் கூற, அதனைக்கேட்ட அரசன் பெரிதும் வெகுண்டு ' அங்ஙனமாயின் அவனது வலிய குன்றரணம் இடிய வென்று அவனையும் அவனது களிற்றினங்களையும் பற்றி ஈண்டுக்கொணர்மின்' என்றனன். அரசன் அங்ஙனம் கூறலும், ஆண்டு அருகிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத்தொண்டைமான் 'அடியேன் கலிங்கமெறிந்து வருவல் ; அடியேற்கு விடைகொடுக்க' வென, அரசனும் 'அங்ஙனமே செய்க' என்றனன்.

குலோத்துங்கனிடத்து விடைபெற்ற கருணாகரன் கால்வகைத்தானையோடும் போர்க்கெழுந்தனன் ; எங்கும் முரசங்கள் முழங்கின : வளைகள் கலித்தன ; நாற்படையும் சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப்போல் திரண்டெழுந்