பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

57

அன்னாரது வழியில் எதிர்ப்பட்ட சில கலிங்கர்கள் தங்கள் உடல்முழுவதும் மாசேற்றித் தலைமயிரைப் பறித்தெடுத்து அரையிலுள்ள கலிங்கத்தைக்களைந் தெறிந்துவிட்டு, ' ஐயா யாங்கள் சமணர்கள் ; கலிங்கரல்லேம்' எனக் கூறிப் பிழைத்துச் சென்றனர். சிலர் சிலையின் நாணை மடித்து முப்புரி நூலாக அணிந்து கொண்டு ' ஐயா, யாங்கள் கங்கை நீராடப் போந்தேம். விதிவலியால் இங்கு அகப்பட்டுக்கொண்டேம் ; கரந்தவ ரல்லேம்' எனச் சொல்லி உயிர் பிழைத்தனர். குருதி தோய்ந்த கொடித்துணிகளைக் காவியுடையாக வுடுத்துக் கொண்டு தலையினை முண்டிதஞ் செய்துகொண்டு “ஐயா, எங்கள் உடையைக் கண்டவளவில் எங்களைச் சாக்கிய ரென்று அறிகிலிரோ?" என்றியம்பி யுய்ந்தனர் சிலர். சிலர் யானைகளின் மணிகளை அவிழ்த்துத் தாளமாகக் கையிற் பிடித்துக்கொண்டு கும்பிட்டு, "ஐயா, யாங்கள் தெலுங்கப்பாணர்கள் ; சேனைகள் மடிகின்ற செருக்களங்கண்டு திகைத்து நின்றேம்; இத்தேயத்தினரல்லேம்" என்றுரைத்துப் பிழைத்துப்போயினர். இவ்வாறு பிழைத்துச் சென்றவர்கள் தவிர, கலிங்க நாட்டில் உயிர் பிழைத்தவர்கள் வேறு ஒருவருமிலர்.

கலிங்கமெறிந்து வாகைமாலைசூடிய கருணாகரத் தொண்டைமான் களிற்றினங்களோடு நிதிக்குவியல்களையும் பிறவற்றையுங் கவர்ந்துகொண்டுவந்து குலோத் துங்க சோழன் திருமுன்னர் வைத்து வணங்கினான். நேரியர்கோன் பெரிதும் மகிழ்ச்சியுற்றுத் தொன்டைமானது போர்வீரத்தைப் பலபடப் பாராட்டி அவற்தத் தக்க வரிசைகள் செய்தனன்.