பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் தலைவர்கள்

71

ஆற்றலாற் படிப்படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் வேந்தனது அமைச்சர் தலைவனாகவும் படைத்தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினான். இவனே, வடகலிங்கப் போர்க்குத் தலைமைப் படைத்தலைவனாகச் சென்று, போர்நடத்தித் தன் அரசனாகிய குலோத்துங்க சோழற்கு வாகைமாலை சூட்டியவன். குலோத்துங்கன் எய்திய பெரும்புகழுக்குச் சிறந்த காரணமாயிருந்தோருள் இவன் முதன்மையானவன் என்று சிறிதும் ஐயமின்றிக் கூறலாம். கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரும் இவனை 'வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி-உலகுபுகழ் கருணாகரன்[1] எனவும், 'கலிங்கப் பரணி' நம் காவலனைச் சூட்டிய தோன்றல்[2] எனவும் புகழ்ந்துள்ளார். இவனது அரிய அரசியல் ஊழியத்தைப் பெரிதும் பாராட்டி அதற்குரிய அறிகுறியாக வேள்' ‘தொண்டைமான்' ஆகிய பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன் இத்தகைய சிறப்பினை எய்திக் குலோத்துங்கனது அரசியலைப் பெருமையுறச் செய்தது இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலேயாகும். இவன், குலோத்துங்கனது மகனாகிய விக்கிரம சோழனது ஆளுகையிலும் இருந்துள்ளான் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படுகின்றது.[3]. இவன் வாழ்ந்த ஊர் வண்டை என்பர் ஆசிரியர் சயங்கொண்டார். அவ்வூர், சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழவள நாட்டைச்சார்ந்த திருநறையூர் நாட்டி-


  1. 1. க. பரணி - தா. 430.
  2. 2. ஷை 522.
  3. 3. விக்கிரமசோழனுலா-நண்ணி - 69.