பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதினொன்றாம் அதிகாரம்



குலோத்துங்கனுடைய அரசியல் தலைவர்கள்


குலோத்துங்கனது ஆளுகையில் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் திருமந்திர ஓலைநாயகமாகவும் திருமந்திர ஓலையாகவும் திருவாய்க் கேள்வியாகவும் புரவுவரித்திணைக்களத்தினராகவும் அமர்ந்து அரசாங்கத்தை இனிது நடத்திய அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் ஆவர். அவர்களுட் சிலருடைய பெயர்கள் மாத்திரம் கல்வெட்டுக்களால் தெரிகின்றன. அன்னோருள் மூவரது வரலாற்றைச் சிறிது விளக்குதற் குரிய கருவிகள் கிடைத்துள்ளமையின் அவர்களைப் பற்றிய செய்திகளும் ஈண்டுச் சுருக்கமாக எழுதப்படுகின்றன.

1. கருணாகரத்தொண்டைமான் :- இவனது வரலாற்றைக் கலிங்கத்துப்பரணி ஒன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் ஒன்றிலதேல் தமிழகத்தில் அக் காலத்தே பெருவீரனாய்ப் பெரும்புகழ் படைத்து விளங்கிய இக்குறுநில மன்னனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்துகொள்ளாதவாறு மறைந்தொழிந்திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு சிற்றரசன். இவன், நுண்ணறிவிலும் கல்வி கேள்விகளிலும் சிறந்தவனாயிருந்தமையின் நம் குலோத்துங்கனது அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக முதலில் அமர்த்தப்பட்டான். பின்னர், தன் சீரிய