பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 வல்லிக்கண்ணன் கதைகள்

பிரச்னைகளையும் மறந்தார். இந்தத் தரிசனத்துக்காக எத்தனை நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

தீபாராதனை முடிந்து, விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டதும், 'அப்ப நான் வரட்டுமா?’ என்று ராமலிங்கம் ராசாப்பிள்ளையிடம் கேட்டார்.

"நல்லாயிருக்குதே நியாயம்! இத்தனை நேரம் இருந்து போட்டு பூஜைப் பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல் போவதாவது! இருங்க இருங்க, இதோ:ஆச்சுது!’ என்றார் மற்றவர்.

அங்கேயே வசதியான ஒரு இடத்தில் இலைகள் பரப்பி, பிரசாதம் விநியோகித்தார்கள். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல். ராமலிங்கம் இலையில் தாராளமாகவே பரிமாறப்பட்டன.

'இதே போதும். இனிமேல் சாப்பாடு தேவையில்லை. வீட்டுக்குப் போயி, உடனே கிளம்ப வேண்டியது தான்' என்று அவர் எண்ணிக் கொண்டார்.

மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அகிலாண்ட நாயகியின் உருவத்தை அவர் திரும்பிப் பார்த்தபோது, மீண்டும் அந்த புன்னகை அவரை வீசிகரித்தது. குறும்புத்தனமும் பரிவும் பிரியமும் கலந்த ஒரு மோகனப் புன்னகை. எதிரே நின்று முகம் பார்த்து அன்னை சிரிப்பது போலவே தோன்றியது. -

ராமலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஒரு நிறைவு புகுந்தது. அம்மனையே பார்த்தபடி நின்றார்.

சிறிது நேரம் சென்றதும், திடுக்கிட்டவராய் தன்னை சுதாரித்துக் கொண்டு, 'அம்மா அகிலாண்ட நாயகி! நீ தான் எனக்குத் துணை. அம்மா, என்னை கைவிட்டு விடாதே' என்று மனமாறப் பிரார்த்தித்து வணங்கினார். பிறகு திரும்பித் திரும்பி அன்னையின் அருள் முகத்தைப் பார்த்தபடி நடந்தார்.

ராமலிங்கம் ‘பஸ் நிற்குமிடம் சேர்ந்தபோது, 'ஜங்ஷன் போற பஸ் இப்ப தான், சித்தெ முந்தித்தான் போச்சு என்ற தகவல் கிடைத்தது. 'அடுத்த பஸ் இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடும் என்று ஆறுதல் மொழியும் கிடைத்தது. -

'இன்னும் கொஞ்ச நேரம்' என்பது அந்த ஊர் பஸ்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு நாள் - ஒவ்வொரு நேரத்தில் - இவவ்வேறு கால அளவாக அமையும். ராமலிங்கம் காத்திருந்த வேளையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக ஆயிற்று.