பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

எஸ். எம். கமால்

கோயில் அர்த்தஜாமக் கட்டளையை நிறுவி அதற்காக பல கிராமங்களை மானியங்களாக வழங்கினார். இராமேசுவரம் செல்லும் பயணிகளது வசதிக்காக, இராமநாதபுரத்திலும் புகலூரிலும் புதிய அன்ன சத்திரங்களை அமைத்தார். மல்லாங் கிணறு, பிடாரிசேரி ஆகிய ஊர்களில் இருந்த சிதைந்த அன்னச் சத்திரங்களையும் புதுப்பித்து இயங்குமாறு செய்தார். இவை தவிர, கல்விமான்களுக்கும் வேதவிற்பள்ளிகளுக்கும் இவர் வழங்கிய மான்ய கிராமங்கள் இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் 'தொன்னுாற்று ஆறு தர்மாசனங்கள்' என குறிப்பிடப்படுகின்றன. இவரது நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தவர் பிரதானி தியாகராஜபிள்ளை என்பர்.

கி.பி. 1804-ல் இராமனாதபுரம் கோட்டைக்கு வருகை தந்த ஜியார்ஜி வாலண்டினோ என்ற இங்கிலாந்து நாட்டு பிரமுகர் இவரைச் சந்தித்து உரையாடியதை தமது பயண நூலில் குறித்து வைத்துள்ளார். .ஒல்லியான உயர்ந்த தோற்றமுடையவர். அண்மையில் அவரது கணவனை இழந்து விட்டதால், இந்தியர்களது வழக்கப்படி, அவர் எவ்வித அணிகலன்களும் அணிந்து இருக்கவில்லை. சீனப்பட்டும் வெண்மையான மஸ்லின் துணியும் புனைந்து இருந்தார். பொன்னாலான தொங்கட்டான்களுடன் கூடிய அவரது நீண்ட காதுகள், பளுவினால் தோள் பட்டைக்கும் கீழே தொங்கின. பெரிய இதழ்கள் சற்று கருமையான நிறம்...' என்று தொடர்கிறது அவரது குறிப்புக்கள்.

இவருக்கு மகட்பேறு இல்லாததால் தமது கணவரது உறவினரான அண்ணாசாமி என்பவரை தமது வாரிசாகக் கொண்டிருந்தார். 18-7-1812-ல், இவர் இராமனாதபுரத்தில் காலமானார்.

6. கும்பெனியார்

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரைக் குறிக்கும் சொல். ஆங்கிலேயர்கள் இந்தியா, சீனம் போன்ற கீழை நாடுகளுடன் வாணிகம் மேற்கொள்ளுவதற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இங்கிலாந்து நாட்டு அரசு வழங்கிய அனுமதியுடன் இந்தக் குழுவினர் கி.பி. 1600-ல் தில்லியில் முகலாயப் பேரரசராக இருந்த ஜஹாங்கீர் மன்னரைப் பேட்டி கண்டு, அவரது ஒப்புதல் பெற்று இந்திய நாட்டில் தங்களது வாணிபத்தை