பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

11


ஊரை ஆண்டுத் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர். தண்டமிழ்ச்சான்றோர் பல்கிய பண்டைத் தமிழரசு அவ்வாறிருந்தது.


“அரசியல் பிழையாது அறநெறிகாட்டி
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது”

-(மதுரைக்காஞ்சி)

நடப்பதாகி

முறை வேண்டுநர்க்கும்
குறை வேண்டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கருளி

(பெரும்பாணாற்றுப்படை)

நீர் சூழ் தமிழகத்தைச் சீர் சூழ்ந்ததாக்கிய பண்டை அரசின் கீழ்தான். மாந்தர் இன்புற்று வாழ்ந்தனர், இவையெல்லாம் பழங்கதை!

இற்றைத் தமிழரசோ, ஒழுங்கற்றார் கையிற்றங்கியது. மக்கள் நலங்கருதாது, தன்னலங் கருதுவார் பின்புறத்திற் போயொடுங்கியது. இதுவேயுமன்றி, மக்களும் அரசு பிறழ்ந்த அடிவழித் தாமும் பிறழ்ந்தனர். மேனாட்டாரிடமிருந்து கற்க வேண்டுவன கல்லாது, கற்கக் கூடா நாகரிகமென்னுங் கொடுவழி பற்றிக் குலைந்து போகின்றனர் மக்கள்


“இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லதுவெஃகி வினை செய்வாரையும்”
(-பரிபாடல்)


“இலனென்னும் எவ்வம் உரையாமுன்
ஈயுங் குணமுடையாரையும் காண”

ஆவலாகவிருக்கின்றோம்.


“கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதுஉம் குறைகொடாது”
(பட்டினப்பாலை)

வாழும் வணிகரைக் காணோம்.


‘அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறும்’

(-மதுரைக்காஞ்சி)