பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வேண்டும் விடுதலை

அவையத்தைப் பார்க்கவும் கேட்கவும் விருப்பமுடைய வராகித் தேடுங்கால் பொய்மையும் புலையும், வெப்பச் சூழ்வும் கொண்ட அறமன்றம் நம் கண்களிற் படுகின்றது.

இத்துணை ஏற்றத் தாழ்வுக்கும் காரணம் என்னை ? என்னை ? என்று கடாவுவாரையும், கவலுறுவாரையும் கூடக் காணவியலவில்லை. ஊன்றிப் பார்க்குங்கால் நமக்குக் கிடைத்த முடிபுகள் இரண்டு.

இற்றைத் தமிழகத்தில்,

அரசுக்குத் தக்க குடிகளில்லை!
குடிகளுக்குத் தக்க அரசில்லை.

இவ்விரு குறைகளுள் ஒன்று நிறைவாயிருப்பினும், காட்டரசாகவோ, அன்றி நாட்டரசாகவோ இஃது இயங்க முடியும். ஈண்டோ, காடுமல்லாது, நாடுமல்லாது, மக்காளும், மக்களும் புகுந்த காடுங் கழனியுமாக வன்றோ காண்கின்றோம். நல்ல மக்கள் நல்லாட்சியை அமைத்தல் இயலும். அல்லது நல்ல ஆட்சி, நல்ல மக்களை, ஆக்கலும் இயலும் ஈண்டு நாம் பெற்ற தன்னரசாட்சியில் மக்களே ஆள்நரைப் பொறுக்குவதால் நல்ல ஆட்சி அமையாமைக்கும் அவரே காரணமாவார். இதற்குக் கல்லாமையைக் காரணங் காட்டுவாருமுளர்.

அதுவும் ஒரு காரணமேயன்றி, அதுவே முழுக் காரணமாகாதென்போம். அதற்கு வலித்தமும் காட்டுவோம்

கல்லாதவர் பெருகியிருப்பதாலேயே ஆள்நரைத் தெரிந்தெடுக்க இயலாதவராய் மக்கள் இருக்கின்றனர் என்பது உண்மையாயின் கற்றவர் என்பவர் எல்லோரும் ஒழுக்கமுடையவராயும், நெறியுடையவராயும் பிறர் நலம் பேணும் பெற்றியராயும் இயங்குகின்றனரோ? அவ்வாறில்லையே! கற்றவரில் நூற்றுக்குப் பதின்மர் தாமும் அவ்வாறில்லாதிருக்கக் கல்லாமையே ஆட்சிச் சிறப்பின்மைக்குக் காரணமாவ தெங்ஙன்?

ஆக இது பற்றி நாம் கொண்ட கருத்து என்னை யெனின் கற்றவர் மாட்டுமன்றிக் கல்லார் மாட்டும் திகழுவனவாகிய மக்கட்பண்பும், ஒழுக்க விழுப்பமும் இல்லாமைப் பொருட்டே நாடும். நாட்டை இயக்குகின்ற அரசும் சிறப்பாக நாம் இலக்கியங்களில் படிக்குமாறும். கேட்குமாறும் அமைய இயலவில்லை.

“என்னிழல் வாழ்நர் சென்னிழற காணாது